விர்ரென ஏறி.. சர்ரென குறைந்த தக்காளி விலை

Aadmika
Aug 11, 2023,01:48 PM IST
சென்னை : மலையளவு உயர்ந்து அனைவரையும் மலைக்க வைத்த தக்காளி விலை தற்போது அப்படியே பாதிக்கும் கீழாக குறைந்துள்ளது. இதனால் மீண்டும் உயர்ந்து விடுமோ என்ற அச்சத்தாலும், விலை குறைந்த ஆர்வத்தாலும் மக்கள் தக்காளியை அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர். 

கடந்த இரண்டு மாதங்களாக நாடு முழுவதும் தக்காளி விண்ணை தொடும் அளவிற்கு உயர்ந்திருந்தது. பெட்ரோல் விலையையே மிஞ்சி ஒரு கிலோ தக்காளி விலை ரூ.200 முதல் ரூ.250 வரை விற்பனையானது. இதனால் சாமானிய மக்கள் இந்த விலை ஏற்றத்தை தாங்க முடியாமல் தவித்தனர்.  ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் தக்காளி விலை குறையாததால் பலர் தக்காளிக்கு மாற்று வேறு என்ன உள்ளது என தேட ஆரம்பித்து விட்டனர்.  



வட மாநிலங்களில் பெய்த கனமழை, அதிகமான வெப்பம், விளைச்சல் குறைவு உள்ளிட்டவை தக்காளியின் திடீர் விலை ஏற்றத்திற்கு காரணமாக சொல்லப்பட்டது. இதனால் தக்காளியை மானிய விலையில் கூட்டுறவு மையங்களில் விற்பனை செய்ய மத்திய, மாநில அரசுகள் ஏற்பாடு செய்து வந்தன. 

இந்நிலையில் கடந்த சில நாட்களாக சென்னையில் சிறிது சிறிதாக குறைய துவங்கிய தக்காளி விலை, தற்போது சர்ரென குறைந்து கிலோ ரூ.60 முதல் 80 என்ற அளவில் குறைந்துள்ளது. கோயம்பேடு மொத்தம் விற்பனை சந்தையிலேயே தக்காளி விலை ரூ.100 ஆக குறைந்துள்ளது. ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் தக்காளியின் வரத்து அதிகரித்துள்ளதால் தக்காளி விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 

தக்காளி மட்டுமல்ல அதிரடியாக விலை உயர்ந்த வெங்காயம், பீன்ஸ் போன்ற காய்கறிகளின் விலையும் குறைந்துள்ளது. ஒரு கிலோ பீன்ஸ் ரூ.30 முதல் 40 என்ற விலைக்கே விற்பனையாகிறது. தக்காளி விலை இன்னும் குறைய வாய்ப்புள்ளதாக சொல்லும் வியாபாரிகள், வெங்காய விலை செப்டம்பர் வரை சற்று அதிகமாக தான் இருக்கும். ஒரு கிலோ ரூ.50 முதல் 60 என்ற விலைக்கு தான் விற்பனையாக வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.