எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவ்லனி மரணம்.. கொந்தளிப்பில் ரஷ்யா.. தெருக்களில் இறங்கிய மக்கள்!

Manjula Devi
Feb 17, 2024,10:32 AM IST

சென்னை: ரஷ்யாவின் மிக முக்கிய எதிர்க்கட்சித் தலைவரான அலெக்ஸி நவ்லனியின் திடீர் மரணம் அங்கு பெரும் பரபரப்பையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மக்கள் தெருக்களில் இறங்கி போராடத் தொடங்கியுள்ளனர். 


செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகர் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. போராட்டத்தை ஒடுக்க போலீஸும், ராணுவமும் களம் இறக்கப்பட்டுள்ளன. போராட்டத்தில் ஈடுபடுவோரை போலீஸார் கைது செய்து வருகின்றனர்.


செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் குதித்தனர். அவர்களை போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தி வருகின்றனர்.  அலெக்ஸி மரணத்தால் நாடு முழுவதும் பரபரப்பும், பதட்டமும் அதிகரித்திருப்பதால் ராணுவம் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.




இன்றைய பிற முக்கிய செய்திகள்:


சேலம் அதிமுகவில் வெடித்தது உட்கட்சி மோதல்


சேலம் மாநகர் மாவட்ட முன்னாள் அதிமுக செயலாளர் வெங்கடாசலம் அதிமுக ஆட்சியில், அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பலரை ஏமாற்றி, 40 லட்சம் ரூபாய் பணத்தை திருப்பி தராமல் இருப்பதாக அதிமுக ஒன்றிய செயலாளர் வி.வி ராஜு குற்றம் சாட்டியுள்ளார். லோக்சபா தேர்தல் நெருங்கும் நேரத்தில் உட்கட்சி மோதலைத் தொடர்ந்து, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை எடுப்பாரா என சேலம் மாவட்ட அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


மீனவர்கள் தொடர் கைது.. போராட்டம் குதிக்கும் மீனவர்கள்


அண்மைக்காலமாக இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து மீனவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதும், படகுகளை நாட்டுடமையாக்கி இலங்கை அட்டூழியம் செய்வதையும் கண்டித்து,காலவரையற்ற போராட்டம் நடத்துவது தொடர்பாக ராமேஸ்வரம் மீனவர்கள் ஆலோசனையில் குதித்துள்ளனர். 200க்கும் மேற்பட்ட மீனவர்கள் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தி வருகின்றனர்.


கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிக்க மீனவர்கள் திட்டம்


தமிழக மீனவர்கள் இலங்கை கடற்கரை படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கச்சத்தீவு திருவிழாவையும் புறக்கணிக்க ராமேஸ்வரம் மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.


மியான்மரில் லேசான நிலநடுக்கம்


மியான்மரில் இன்று லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4 பதிவாகியுள்ளது. பூகம்பம் தொடர்பான பாதிப்பு விவரம் வெளியாகவில்லை.