ஐபிஎல் கிரிக்கெட் கொண்டாட்டம்: சென்னையில் நள்ளிரவு வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு

Meenakshi
Mar 22, 2024,05:45 PM IST
சென்னை: சென்னையில் இன்று ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெறுவதையொட்டி நள்ளிரவு வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

 17வது ஐபிஎல் திருவிழா இன்று முதல் தொடங்கி மே 26ம் தேதி வரை நடைபெற உள்ளது. இப்போட்டியில் இந்திய வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்களும் கலந்த கொண்டு விளையாட உள்ளனர். சேப்பாக்கம் மைதானத்தில் இன்று  தொடங்கும் விழா மாலை 6:30 மணிக்கு தொடங்கி ஒரு மணி நேரம் தொடக்க விழா கோலாகலமாக நடைபெற உள்ளது. இதில் இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான். இந்தி பாடகர் சோனு நிகாம். இந்தி நடிகர்கள் அக்ஷய் குமார், டைகர் ஷெராப் உள்ளிட்டோர்  இசை வெள்ளத்தில் மத்தியில் ஆடிப்பாடி ரசிகர்களை மகிழ்விக்க உள்ளனர்.

தொடக்க விழா காரணமாக இன்று மட்டும் இரவு 8 மணிக்கு போட்டி தொடங்குகிறது. மற்ற நாட்களில் இரவு 7.30 மணிக்கும், ஒரே நாளில் 2 போட்டிகள் நடைபெற்றால், ஒரு போட்டி மாலை 3.30க்கும், மற்றொரு போட்டி இரவு 7.30க்கும் தொடங்க உள்ளது. நடைபெறும் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் vs பெங்களூரு ராயல் சேஞ்சர்ஸ்சும் மோதுகின்றன.ஐபிஎஸ் போட்டியை காண்பதற்கு என்றே தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இப்போட்டிக்கான டிக்கெட்டுகள் கடந்த 18ம் தேதியே விற்று தீர்ந்து விட்ட நிலையில், இப்போட்டிக்கான டிக்கெட் கிடைக்காத ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் மூழ்கியுள்ளனர்.



இந்நிலையில், இப்போட்டியை காண பல்வேறு பகுதிகளில் இருந்து  ஏராளமான ரசிகர்கள் வருவார்கள் என்பதால், சென்னையில் மெட்ரோ ரயில் சேவையின் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இரவு 11 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதேபோல ஐபிஎஸ் போட்டிகளை காண வருபவர்கள் தங்களது ஆன்லைன் டிக்கெட்டைக் காட்டி மாநகரப் பேருந்துகளில் இன்று இலவசமாக பயணிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன. 

மேலும், போட்டி தொடங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பும், போட்டி முடிந்த பின்னர் 3 மணி நேரத்திற்கும் சேப்பாக்கத்தில் இருந்து பிற இடங்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.ரசிகர்கள் வீடு திரும்புவதற்கு வசதியாக இந்த சேவைகள் செய்யப்பட்டள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.