தற்கொலை எண்ணம் தலை தூக்கினால்.. துளியும் தயங்காதீர்கள்.. கமல்ஹாசன் வேண்டுகோள்

Su.tha Arivalagan
Sep 10, 2023,03:43 PM IST
சென்னை: தற்கொலை எண்ணம் தலை தூக்கினால் துளியும் தயங்காதீர்கள். நொடி கூட தாமதிக்காமல் ஆலோசகர்களின் உதவியைப் பெறுங்கள் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தற்கொலை எண்ணத்திற்கு ஆட்படுவோர் இன்று அதிகரித்து விட்டனர். சின்னச் சின்ன விஷயத்துக்காகவெல்லாம் மனம் உடைந்து தற்கொலை முடிவை நாடுவோர் அதிகரித்து விட்டனர். மனைவியுடன் சண்டை.. உடனே தற்கொலை.. அப்பா திட்டி விட்டார்.. அதற்காக தற்கொலை.. பரீட்சையில் பெயிலாகி விட்டோம்.. அதற்கும் தற்கொலை.. என்று உப்புக்குப் பெறாத விஷயத்துக்கெல்லாம் தங்களது அரிய உயிரை நீக்கிக் கொள்வோர் அதிகரித்து வருவது வேதனை தருவதாக உள்ளது.



தற்கொலை எண்ணத்திலிருந்து விடுபட அரசுகளும், பல்வேறு அமைப்புகளும், பிரபலங்களும் தங்களால் ஆன அனைத்தையும் செய்து வருகின்றனர். இவற்றை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்.. வாசல்தோறும் வேதனை இருக்கும்.. அதேசமயம், வந்த துன்பம் எதுவும் நிரந்தரமாக தங்கப் போவதில்லை.. வந்த வழியே அது திரும்பிப் போய்த்தான் ஆக வேண்டும்.. இந்தப் பாடல் வரிகளுக்கேற்ப நாம் மனதை திடமாக வைத்துக் கொண்டு, துணிச்சலுடன் எதிர்த்து நிற்க முயல வேண்டும்.

இன்று உலக  தற்கொலை தடுப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்தத் தினத்தையொட்டி நடிகர் கமல்ஹாசன் ஒரு டிவீட் போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

"மனிதனால் தாங்க முடியாத துயரம் என்று சொல்வதற்கு எதுவுமில்லை. மனதை இழக்காதவரை நாம் எதையுமே இழப்பதில்லை" எனும் ப.சிங்காரத்தின் வரிகளைத் துயருற்ற மனங்களை நோக்கிச் சொல்ல விரும்புகிறேன். 

தற்கொலை எண்ணம் தலைதூக்கினால் துளியும் தயங்காமல், நொடிகூடத் தாமதிக்காமல் ஆலோசகர்களின் உதவியைப் பெறுங்கள். ‘செயலே விடுதலை’ என்பதை உணர்ந்து உங்கள் வாழ்விற்கு அர்த்தமும் அழகும் கூட்டும் காரியங்களில் தீவிரமாக ஈடுபடுங்கள். 

‘உயிரின் இயல்பு ஆனந்தம்’ என்கிறார் தேவதேவன். நமக்குக் கிடைத்த இந்த அற்புதமான வாழ்க்கையை ஒவ்வொரு நாளும் கொண்டாடுங்கள் என்று உலகத் தற்கொலைத் தடுப்பு நாளில் கேட்டுக்கொள்கிறேன் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மனதில் எப்போதெல்லாம் விரக்தி, அழுத்தம், குழப்பம் வருகிறதோ.. அப்போது தயவு செய்து தனியாக இருக்காதீர்கள். யாரிடமாவது பேசி விடுங்கள் அல்லது அந்த இடத்தை விட்டு வெளியே போய் விடுங்கள்.. மனதை வேறு பக்கம் திருப்புங்கள்.. மனசு லேசாவது போல உணரக் கூடிய எந்தக் காரியத்திலாவது ஈடுபடுங்கள்.. அழ வேண்டும் போல இருந்தால் அழுது விடுங்கள்.. அது மன பாரத்தைக் குறைக்கும்.. எதையும் அடக்கி வைக்காதீர்கள்.. மனசை லேசாக வைத்துக் கொள்ளுங்கள்.. நமக்குக் கிடைத்திருக்கும் வாழ்க்கை, உயிர் அரியது.. அதை முடிக்க நமக்கு உரிமை இல்லை.. வாழ்ந்துதான் பார்ப்போமே..!