World Rabies Day .. நாய் கடித்தால் என்ன செய்யணும் தெரியுமா?

Meena
Sep 28, 2023,05:33 PM IST

- மீனா


செப்டம்பர் 28 அன்று உலகெங்கிலும் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்கள் ஒன்றிணைந்து  மக்களுக்கு இந்த நோயின் தாக்கத்தை குறித்தும், இந்த நோய் வராமல் தடுப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தவே உலக ரேபீஸ் நோய்த் தடுப்பு நாள் அனுசரிக்கப்படுகிறது. 


குளோபல் அலையன்ஸ் ஃபார் ரேபிஸ் கண்ட்ரோல் (GARC) மூலம் நடத்தப்படும் இந்த நிகழ்வு பொது மக்களுக்கிடையே  ரேபிஸ் நோயை எவ்வாறு ஒழிக்கலாம் என்று  விழிப்புணர்வு ஏற்படுத்த  முயல்கிறது. இந்த ரேபிஸ் நோய் 99% மனிதர்களுக்கு நாய் கடிப்பதினால் வருகிறது. ஏனென்றால் உலகம் முழுவதும் ரேபிஸ் நோயினால் பாதிக்கப்படும் விலங்குகளில் நாய்கள் முதல் இடத்தில் உள்ளன.




ஒரு நாள் விழிப்புணவை ஏற்படுத்துவதற்காக மட்டுமல்ல, ஆண்டு முழுவதும் ரேபிஸ் பரவுவதை கட்டுப்படுத்த உதவும் வகையில் சமூகங்கள் நடவடிக்கை எடுக்க முடியும் என்ற நம்பிக்கையில் GARCஅமைப்பு இதற்கு நிதி உதவி அளிக்கிறது. ஏனென்றால் விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் உலகெங்கிலும் ஒவ்வொரு ஆண்டும் 60, 000 க்கும் மேற்பட்ட மக்கள் ரேபிஸ்  தொற்று நோயால் பாதிக்கப்பட்டு இறப்பை சந்திக்கிறார்கள். 


உலக சுகாதார நிறுவனம் 100% ரேபிஸ் நோயை தடுக்கக்கூடிய நோயாக கருதுவதால் தேவையற்ற இந்த மாதிரி மரணங்களை தடுக்க, உலகெங்கிலும் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்கள் ஒன்றிணைந்து செயல்பட்டு மக்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள். வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகளுக்கு ரேபிஸ் நோய் வராமல் எப்படி தடுக்கலாம் என்று அறிந்து கொள்வதன் மூலம் இந்த வைரஸை முழுமையாக ஒழித்து விடலாம்.  நாம் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கு முறையான தடுப்பூசி போடுவதன் மூலம் இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியும். 


வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணியை வேறொருவர் செல்லப்பிராணி கடித்தாலோ அல்லது தெருவில் உள்ள நாய்கள் கடித்தாலோ முதலில் செல்லப்பிராணியை கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முறையான தடுப்பூசி போட வேண்டும். அதேபோல் உங்கள் செல்லப்பிராணி உங்களை கடித்தால் கூட முதலில் கடித்த இடத்தில் சோப்பு போட்டு நன்றாக கழுவி விட்டு பின்பு மருத்துவமனைக்கு உடனே சென்று சீரான இடைவெளியில் மருத்துவரின் ஆலோசனைப்படி தடுப்பூசி போட்டுக் கொள்வது மிகவும் முக்கியம். இவ்வாறு செய்வதன் மூலம் ராபிஸ் வைரஸ் மூலம் ஏற்படும் மரணத்தை தடுக்க முடியும். 


இதை வலியுறுத்தவே  இந்நாளில் வெறிநாய்க்கடி மூலம் ரேபிஸ் வைரஸ் எப்படி பரவுகிறது ,எப்படி பரவாமல் தடுக்கலாம், அப்படி  வைரஸினால் பாதிக்கப்பட்டால் அதற்கு எப்படி முறையான சிகிச்சை எடுத்துக் கொள்வது என்பதனை நாம் ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிந்து கொள்வது அவசியம். இந்த மாதிரி விஷயங்களை மற்றவர்களுக்கும் எடுத்துக்கூறி அவர்கள் அறியாமையும்  போக்கி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது நாம் ஒவ்வொருத்தருடைய கடமையும் கூட.


நாய்களைக்  கண்டு அஞ்சத் தேவையில்லை.. அவற்றை முறையாக பராமரித்தாலே ரேபிஸ் பாதிப்பிலிருந்து நாம் நிச்சயம் விடுபட முடியும்.