காகிதம் எடுங்கள்.. கற்பனையை அவிழ்த்து விடுங்கள்.. அழகான கவிதை வரையுங்கள்!

Su.tha Arivalagan
Mar 21, 2024,02:30 PM IST

இன்று உலக கவிதைகள் தினம்.. கவிதைகளை ரசிக்காத மனங்கள் எங்குமே இல்லை.. மனதுக்கும், நமது திறமைக்கும் பெரும் ஊக்கம் தருவது கவிதைகள்.


மனிதன் தனது உணர்வுகளை வெளிப்படுத்த பயன்படுத்தி ஒரு ஊடகம்தான்.. கவிதை. மனதில் எழும் எண்ணங்களையும், உணர்வுகளையும் வார்த்தைகளில் அலங்காரம் சேர்த்து வெளிப்படுத்தும்போது தோன்றுவதுதான் கவிதை.




அழகிய உணர்வுகளின் வெளிப்பாடுதான் கவிதை. மகிழ்ச்சி..  கவலை .. கோபம் .. காதல் .. பாசம் என மனிதர்களுக்குரிய அனைத்து உணர்வுகளையும் அழகாக வெளிப்படுத்து பயன்படுவது கவிதை ஆகும். ஒருவரது கவித்திறமை பல ரூபங்களில், பல விதங்களில் பரந்து விரிகிறது.. கவிதையாக, திரைப்படப் பாடலாக என்று அது பல உருவம் பெறுகிறது. கவிதைகளின் நீட்சிதான் பாடல்.  கூடவே இசையும் சேரும்போது அது கவி விருந்தாக, இசை அமுதமாக மாறுகிறது. கவிதையும் இசையும் ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகள் ஆகும். 


பல நல்ல விஷயங்கள்  கவிஞர்களின் பார்வையில் வெளிப்படுத்தும் கவிதை நடை நமக்கு அற்புதத்தையும் ஆனந்த உணர்வையும் தரும். படைப்பு என்பது இறைவனுக்கு மட்டும் உரியது அல்ல.. நல்ல கவிஞர்களின் சிந்தனைகள் தான் இந்த கவிதைகள். சாதாராண விஷயங்களும்  ஒர் கவிஞனின் பார்வையில் வேறு விதமாக தெரியும்.. நம்மை சுற்றி நடக்கும் விஷயங்கள் இதில் அடங்கும்.  


ஒரு நல்ல கவிஞனாக வேண்டும் என்றால் முதலில் ஒரு நல்ல ரசிகராக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் நல்ல உணர்வுகளை வெளிப்படுத்த முடியும். பக்திக் கவிதைகள், இயற்கக் கவிதைகள், ஆன்மீகக் கவிதைகள், காதல் கவிதைகள், தேச பக்திக் கவிதைகள் என பல வகையான கவிதைகள் இருக்கின்றன. சங்க காலத்திலும் கவிதைகள் இருந்தன.. இன்றும் அவை வேரூண்றிக் கிடக்கின்றன. 


கவிதைகள் படிக்கும் பொழுதும் சரி, படைக்கும்போதும் சரி, மனதிற்கு இனம் புரியாத உணர்வினையும் நல்ல பாசிட்டிவான எனர்ஜியையும் அது வழங்குகிறது. அதனால் தான் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்களிடம் கவிதை போட்டிகள் நடத்தப்படுகிறது. கவிதைகள், ஒருவரது படைப்பாற்றலை, கற்பனைத் திறமையை வளர்க்க, மேம்படுத்த உதவுகிறது. மனம் லேசாக உதவுகிறது. நமது திறமையை வெளிப்படுத்தவும் உதவுகிறது. 


கடல் உள்ளவரை.. காதல் உள்ளவரை.. கற்பனை உள்ளவரை.. கவிதைகளுக்கும் ஓய்வில்லை.. கவி அலைகளும் ஓய்வதில்லை!


கட்டுரை: சுஜித்ரா