சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம்.. அம்மனே பக்தர்களுக்காக விரதம் இருக்கும் அதிசயம்!

Swarnalakshmi
Apr 04, 2025,01:12 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


உலகப் புகழ் பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மாசி மாத கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாத கடைசி ஞாயிறு வரை பக்தர்களுக்காக 28 நாட்கள் பச்சை  பட்டினி விரதம் இருக்கும் வழக்கம் உள்ளது.அம்மனே பக்தர்களுக்காக விரதம் கடைப்பிடிப்பாள்.


மாசி மாத கடைசி ஞாயிறு முதல் அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடைபெறும். மகிஷாசுரனை வதம் செய்த பாவம் தீரவும் தம் கோபம் அடங்கவும் தவம் செய்து பச்சை பட்டினி விரதம் இருந்து சாந்த சொரூபியாக மாறிய சமயபுரம் மாரியம்மன் காக எழுப்பப்படும் திருவிழா இது.


பச்சை பட்டினி விரதத்தின் நோக்கம்:




சமயபுரம் மாரியம்மனை தரிசிப்போருக்கு நவக்கிரக தோஷம் நீங்கும் என்பது ஐதீகம் .பச்சை பட்டினி விரதம் நோக்கம் என்னவென்றால் உலக நன்மைக்காகவும், பக்தர்களுக்கு நோய் நொடிகள் தீவினைகள் அணுகாது ,சகல சௌபாக்கியங்களும் கிடைக்க விரதம் கடைபிடிக்கப்படுகிறது.


பூச்சொரிதல் விழா:


பூச்சொரிதல் விழா ஞாயிற்றுக்கிழமை தோறும் மார்ச் 9 ஆம் தேதி, 16ஆம் தேதி, 23ஆம் தேதி, 30-ஆம் தேதி, ஏப்ரல் ஆறாம் தேதி நடைபெறும். மார்ச் மாதம் ஒன்பதாம் தேதி முதல் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி வரை 28 நாட்கள் அம்பாள் எதுவும் சாப்பிடாமல் உலக மக்கள் நன்மைக்காக விரதம் மேற்கொள்வதுதான் பச்சை பட்டினி விரதம். இந்த 28 நாட்களும் மாரியம்மனுக்கு- இளநீர், பானகம் ,உப்பில்லாத நீர்மோர் ,பழ வகைகள், கரும்பு ,துள்ளு மாவு இவைதான்  நைவேத்தியமாக வைத்தியமாக படைப்பார்கள்.


தினமும் ஆறு கால பூஜைகள் நடைபெறும். ஆறு விதமான தளி கையும் நைவேத்தியமாக வைப்பார்கள் .சமைத்த உணவு பொருள் தான் தளிகை என்பர் .ஆனால் அம்மனுக்கு 28 நாட்களும் சமைக்காத உணவுகளை நைவேத்தியமாக படைப்பார்கள். பெரும்பாலான பக்தர்களுக்கு இதனை பற்றி அறிந்திருப்பார். அறியாதவர்களுக்கு இந்த பதிவு நல்ல பயனுள்ளதாக இருக்கும்.


வீட்டில் இருப்பவர் எப்படி வழிபடுவது?


வீட்டில் இருந்தபடியே மாரியம்மனோடு சேர்ந்து கடும் விரதம் சிலர் கடைப்பிடிப்பார்கள். ஆனால் அது அவ்வளவு  எளியது அல்ல .28 நாட்கள் பச்சை பட்டினி விரதம்  இருந்து மாரியம்மனை வழிபட அவரவர் வேண்டுதல்கள் கட்டாயம் நிறைவேறும் என்பது நம்பிக்கை.


வீட்டில் இருப்போர் சமயபுரம் மாரியம்மன் திருவுருவப்படம் இருந்தால் தினமும் நைவேத்தியம் -பழங்கள், இளநீர் ,மோர் ,பானகம் என்று அவரவர்க்கு உகந்த நைவேத்தியம் வைத்து, சிவப்பு மலர்களால் அலங்காரம் செய்து ,நெய் விளக்கு ஏற்றி தம்மால் இயன்ற காசு மஞ்சள் துணியில் முடிந்து வைத்து விரதம் இருந்து வழிபாடு செய்வார்கள்.


மனதார  மாரியம்மன் வேண்டி தீப தூப ஆராதனை செய்து வழிபாடு செய்வார்கள். 28 நாட்களும்  இயலவில்லை என்றால் ஐந்து ஞாயிற்றுக்கிழமை மட்டும் அம்மனுக்கு விரதம்  மேற்கொள்வர் .தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறிய பின்னர் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்று காணிக்கையை கோவில் உண்டியலில் செலுத்துவார்கள். பெண்கள் மாதவிடாய் காலங்களில் அம்மனை மனதார நினைத்து பிரார்த்தனை செய்து அவரவர் வேண்டுதல்கள் நிறைவேற்றிக் கொள்வது சாலச் சிறந்தது .சமயபுரம் மாரியம்மன் விரதம் மேற்கொண்டு அனைத்து வளங்களும், நலங்களும், ஆரோக்கிய நலம் பெற்று வாழ்வோமாக.


ஏப்ரல் ஆறாம் தேதி கடைசி ஞாயிறு ஆதலால் சமயபுரம் மாரி அம்மனுக்கு வேண்டுதல் வைத்தால் அவரவர் பிரச்சினைகளுக்கு தீர்வு அளிப்பார் சமயபுரம் அம்மன். மேலும் ஆன்மீக தகவல்களுக்கு இணைந்திருங்கள் தென் தமிழுடன் .உங்கள்  ஸ்வர்ணலட்சுமி.