பிரதோஷம்.. மகா சிவராத்திரி வழிபாடு.. மனமுருக வழிபடுங்கள் சிவனை!

Swarnalakshmi
Feb 25, 2025,02:50 PM IST
- ஸ்வர்ணலட்சுமி

பிப்ரவரி 25  செவ்வாய்க்கிழமை 20 25 இன்று தேய்பிறை பிரதோஷ தினம். சிவபெருமானையும்  நந்தியையும் வழிபட்டால் அனைத்து பலன்களும் கிடைக்கும் .பிரதோஷ வழிபாடு சிவ வழிபாட்டிற்குரிய மிகச் சிறப்பான மிக முக்கியமான நிகழ்வாகும்.

பிரதோஷம் என்பது சூரிய அஸ்தமனத்திற்கு 1.5 மணி நேரத்திற்கு முன்னும் பின்னும் வரும் 3 மணி நேர மங்களகரமான காலமாகும். ஒரு மாதத்தில் இரண்டு பிரதோஷங்கள் ஒன்று வளர்பிறை மற்றொன்று தேய்பிறை பிரதோஷம் ஆகும். இந்நாளில் சிவனையும் நந்தி பகவானையும் வழிபடுவது மங்களகரமானதாகும் இன்று மாலை  4:30   மணி முதல் 6 மணி வரையிலான நேரம் பிரதோஷமாக கருதப்படுகிறது.

சமஸ்கிருதத்தில் 'ப்ர.' என்றால் நீக்குபவர் என்றும் ,'தோஷம் 'என்றால் பாவம் ,தோஷம் ,கர்மா என்றும் பொருள்படும். பிரதோஷ வழிபாடு செய்வது அனைத்து கர்மாக்களும் பாவங்களும் நீங்குவதற்கும் மன அமைதி அடைந்து சிவபெருமானை வணங்கி வழிபாடு செய்ய அனைத்து வளங்களும் நலங்களும் கிடைக்கும்.



மகா சிவராத்திரி : 'சிவாய நம என்று சிந்திப்போர்க்கு அபாயம் ஒருபோதும் இல்லை'.

பிப்ரவரி, 26 புதன்கிழமை 20 25 அன்று இரவு சிவபெருமானுக்கு உகந்த இரவு. அம்பிகைக்கு 9 நாட்கள் நவராத்திரி, என்றால் சிவபெருமானுக்கு உகந்தது இந்த சிவராத்திரி. 

சிவனோ டொக்குந் தெய்வம் தேடினும் இல்லை
அவனோ டொப்பா ரிங்கு  யாவரும் இல்லை

நேரம்:

மகா சிவராத்திரி பிப்ரவரி, 26 புதன்கிழமை காலை 10:18   மணி முதல் பிப்ரவரி 27 வியாழன் காலை 9:01 வரை சதுர்த்தசி திதி உள்ளது. மாசி மாதம் வரும் சதுர்த்தசி திதியை மகா சிவராத்திரி என்று நாம் கொண்டாடுகிறோம்.

வழிபடும் முறை:

மகா சிவராத்திரி அன்று காலை எழுந்ததும் 'ஓம் நமச்சிவாயா 'எனும் பஞ்சாட்சர மந்திரம் சொல்லி எழுந்து, வீட்டை சுத்தம் செய்து, குளித்து நல்ல சுத்தமான எளிய பருத்தி ஆடை அணிந்து, நெற்றியில் திருநீறு பூசி, பூஜை அறையில் சிவலிங்கம் வைத்து வழிபடும் வழக்கம் இருப்பவர் அதற்கு அபிஷேகம் செய்து, பூஜையில் படங்களை வைத்து வழிபடுபவர்களும் அதற்கு ஏற்ற மலர்கள் செம்பருத்திப் பூ, முல்லைமலர் ,வில்வ இலை ஒன்றேனும் வைத்து வழிபாடு செய்வது சிறப்பு வாய்ந்ததாகும்.  விரதம் இருந்து  சிவராத்திரி வழிபாடு செய்வது சிறப்பிற்குரியது.