பெண்களுக்கு ஆண்கள் எதுவும் தர வேண்டாம்.. அவர்களை அவர்களாகவே இருக்க விடுங்கள்.. அது போதும்!

Su.tha Arivalagan
Mar 08, 2024,11:39 AM IST

- சே. மங்களம் வெங்கட்ரமணன்


பெண் என்பவள் சக்தியின் வடிவம். இதை பல இடங்களில் பெண்கள் நிரூபித்துக் கொண்டு இருக்கிறார்கள். ஒரு பெண் வீட்டில் அனைத்துமாக இருக்கிறாள். அன்னையாக, சகோதரியாக, மனைவியாக, சிநேகிதியாக, ஆசிரியராக, ஆலோசகராக என பல வடிவங்களில் இருக்கிறாள். 


ஒரு பெண் வீட்டில் இருந்தால் அவளால் அந்த குடும்பம் உயர்கிறது. தன் அனைத்து ஆசைகளையும் தனக்குள் வைத்துக் கொண்டு குடும்பத்தின் நலனுக்காகவே வாழ்பவள். அவளுக்கு என்று தனிப்பட்ட எந்த எண்ணங்களும் இருக்காது. எல்லாமும் அவளது குடும்பத்தின் நலன் கருதியே இருக்கும்.




வசதி குறைவாக இருந்தாலும் அதை அவள் தன் குணங்களாலும் செயல்களாலும் நிறைவாக்கிக் கொள்கிறாள். குடும்பத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப அவளை அவள் மாற்றிக் கொள்கிறாள்.


வேலைக்கு செல்லும் பெண்கள் அவள் வேலை பாக்கும் இடத்தில் நல்ல பணியாளராக நடந்து கொள்கிறாள். தனக்கு எந்த பிரச்சனை வந்தாலும் துணிச்சலுடனும், மன உறுதியுடனும் அவள் அதை எதிர்கொள்கிறாள். 


எந்த பிரச்சனை வந்தாலும் அதை அவள் தனியாளாகவே சமாளித்து அதிலிருந்து வெளியில் வருவதற்கும் எதிர்த்து போராடி வெற்றியடையவும் தன்னம்பிக்கை கொள்கிறாள். தன் வாழ்நாள் முழுவதும் அவள் பிறர் நலத்தையே முதன்மையாக கொண்டு வாழ்கிறாள். 


பெண்கள் முன்பு வீட்டை வீட்டே வெளியில் வருவதற்கு அனுமதிக்கப் படாமல் இருந்தார்கள். இன்று அவர்கள் விண்வெளிக்கு செல்லும் அளவிற்கு உயர்ந்து இருக்கிறார்கள். எந்த பெண்ணும் ஆணுக்கு சமமாக எல்லா வேலைகளையும் செய்யும் துணிச்சல் அவர்களுக்கு வந்துள்ளது. இன்று பெண்கள் இல்லாத துறைகளே இல்லை என்ற நிலை வந்து உள்ளது.


பெண்களுக்கு ஆண்கள் எந்த சுதந்திரமும் தர வேண்டாம், எதையும் விட்டுத் தர வேண்டாம், எதையும் போராடிப் பெற்றுத் தரவும் வேண்டாம்.. மாறாக, அவர்களை அவர்களாகவே இருக்க விடுங்கள்.. அவர்கள் செய்யும் காரியங்களில் உடன் இருங்கள்.. உற்ற துணையாக இருங்கள்.. அவர்களுக்குத் தேவையானதை அவர்களே எடுத்துக் கொள்வார்கள்.. செய்து முடிப்பார்கள். ஆண்களிடம் பெரிதாக இல்லாத மன உறுதியும், பன்முக வேலைகளைக் கையாளும் திறமைகளும் பெண்களிடம் அதிகமாகவே உள்ளது. அதில் யாரும் இடையூறு செய்யாமல் இருந்தாலே போதும், பெண்கள் உச்சத்திற்கு எளிதாகவே போக முடியும்.


பெண்களை மதிப்போம்.. சுதந்திரமாக இருக்க விடுவோம்.. பெண்மையை போற்றுவோம்!