கார்கிலிலிருந்து பாகிஸ்தானை விரட்டி.. 24 வருடமாகி விட்டது.. மாவீரர்களுக்கு சல்யூட்!

Su.tha Arivalagan
Jul 26, 2023,10:36 AM IST

டெல்லி: கார்கில் போரின் 24வது வருட தினத்தை நாடு இன்று கொண்டாடி வருகிறது.. நிச்சயம் இது கொண்டாடப்பட வேண்டிய ஒன்றுதான்.


இந்தியாவின் பலம் முன்பை விட பல மடங்கு அதிகரித்திருப்பதையும், இந்தியாவின் வேகம் விஸ்வரூபம் எடுத்திருப்பதையும் பாகிஸ்தானுக்கு மட்டுமல்ல உலகத்துக்கே காட்டிய போர்தான் கார்கில் மோதல்.


இந்தியாவின் பிரதமராக அப்போது வாஜ்பாய் இருந்தார். பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் ஷெரீப் இருந்தார். கார்கில் பகுதியில் ஊடுறுவிய பாகிஸ்தான் வீரர்களை விரட்டியடிக்க இந்தியத் தரப்பு பதிலடியில் இறங்கவே அது போராக மாறியது. கார்கில் போரில் பல இந்திய வீரர்கள் தங்களது இன்னுயிரை இழந்தனர். ஆனால் அவர்கள் செய்த தியாகம் வீண் போகவில்லை. அதன் பிறகு நம்மிடம் நேரடியாக வாலாட்டுவதை நினைத்துக் கூட பார்ப்பதில்லை பாகிஸ்தான்.


கார்கில் போரில் இந்தியாவே வெற்றி பெற்றது. பாகிஸ்தான் வீரர்களின் ஆக்கிரமிப்பையும், ஊடுறுவலையும் விரட்டியடித்தது. இந்திய விமானப்படையின் தீரச் செயல் இதில் முக்கியமானது.  1999ம் ஆண்டு மே மாதம் 26ம் தேதி தொடங்கிய யுத்தம், ஜூலை 26ம் தேதி முடிவடைந்தது. இந்தியாவின் வெற்றியுடன் போர் முடிவுக்கு வந்தது. ஆபரேஷன் விஜய் என்ற பெயரில் இந்த போரை நடத்தியது இந்தியா.  இந்திய ராணுவமும், விமானப்படையும் இணைந்து நடத்திய அதிரடித் தாக்குதலால் பாகிஸ்தானியப் படைகள் நிலை குலைந்தன. சமாளிக்க முடியாமல் திணறின. இந்தியாவின் தாக்குதல் வீரியம் மிக்கதாக இருந்ததால் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் ஆக்கிரமித்த, ஊடுறுவிய பகுதிகளை விட்டு தலை தெறிக்க ஓடின பாகிஸ்தானிய படைகள்.


கார்கில் போருக்கு மிக முக்கியக் காரணமே பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி தான். அவர் வேறு யாருமல்ல ஜெனரல் பர்வேஸ் முஷாரப்தான். அவரது அதிகார பசிதான் அந்தப் போருக்குக் காரணம். இந்தப் போருக்குப் பிறகுதான் அவரது தலைமையில் ராணுவப் புரட்சி நடந்து நவாஸ் ஷெரீப் ஆட்சி கலைக்கப்பட்டு, சர்வாதிகாரியானார் முஷாரப் என்பது நினைவிருக்கலாம். தனது சுய லாபத்திற்காக இரு நாடுகளை மோத விட்டு வேடிக்கை பார்த்த முஷாரப், அதிரபான பிறகும் கூட இந்தியாவுக்கு எதிராக எந்த வெற்றியையும், சாதனையையும் படைக்க முடியவில்லை என்பது வரலாறாகும்.