International Haiku Poetry Day.. கைக்குள் அடக்கம் நீ.. ஹைக்கூ கவிதை நீ.. கொண்டாடுங்கள்!

Su.tha Arivalagan
Apr 17, 2024,06:44 PM IST

சென்னை:  இன்று சர்வேதேச ஹைக்கூ கவிதை தினம் இன்று.


மரபுக் கவிதை தெரியும்.. புதுக் கவிதை தெரியும்.. அது என்ன ஹைக்கூ கவிதை என்று நீங்க கேட்க மாட்டீங்கன்னு நம்பறோம்.. ஏன்னா இதுவும் மக்களிடையே பிரபலமாக உள்ள கவி வடிவம்தான்.


ஹைக்கூ கவிதை  ரொம்ப  சிம்பிளானது.. சுருங்கச் சொல்லி விளங்க வைப்பது.. ஆனால் எழுதுவது சற்று சிரமம்தான்.. சிந்தனைத் திறன்.. சீரிய கற்பனை.. வார்த்தை விளையாட்டு என எல்லாவற்றிலும் நீங்க கில்லாடி என்றால் நீங்க எழுதும் ஹைக்கூ கவிதைகளும் கில்லியாக இருக்கும். 


ஜப்பானிய கவிதை வடிவம்தான் ஹைக்கூ. 3 வரிகளில் இருக்கும் ஒவ்வொரு கவிதையும். இயற்கை, காதல், தத்துவம் என பல்வேறு தலைப்புகளில் ஹைக்கூ கவிதைகளை எழுதலாம். மனதில் கிளர்ந்து எழும் உணர்வுகள், கற்பனைகள், ஏக்கங்கள், ஆசைகளை நாம் பொதுவாக கவிதைகளை வடிப்போம். ஹைக்கூவுக்கும் இது பொருந்தும்.




நம்ம ஊரின் திருக்குறள் போலத்தான் இந்த ஜப்பானிய ஹைக்கூவும். முன்பெல்லாம் வெறுமனே கவிதைகளாக எழுதுவார்கள். இப்போது இது ரீல்ஸ் காலம் இல்லையா. இதனால் பலரும் ஹைக்கூ கவிதைகளை ரீல்ஸ்களாகவும் வடிக்கிறார்கள். இதனால் படித்து மகிழ்வது போல இப்போது கேட்டும் மகிழ முடிகிறது. 


தீப்பெட்டி

திறந்தால்

பிஞ்சு விரல்கள்


இது ஓவியர், எழுத்தாளர் கவிஞர்  ஸ்ரீரசா கணையாழி  இதழுக்காக எழுதிய ஹைக்கூ கவிதை.


ரேங்கா என்ற ஜப்பானிய கவிதை வடிவிலிருந்து உருவாக்கப்பட்டதுதான் ஹைக்கூ. ரேங்கா என்பது நீண்ட வரிகள் கொண்ட மரபுக் கவிதை வடிவம். அதிலிருந்துதான் ஹைக்கூவை உருவாக்கினார்கள். 19வது நூற்றாண்டைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் மசாகோ ஷிகி என்பவர்தான் ஹைக்கூ என்ற பெயரை உருவாக்கி அறிமுகப்படுத்தினார்.


ஜப்பானைச் சேர்ந்த கவிதை வடிவமாக இருந்தாலும் கூட உலகம் முழுவதும் பிரபலமானது ஹைக்கூ கவிதைகள். ஆங்கிலத்தில் பலரும்  ஹைக்கூ கவிதைகளை எழுதியுள்ளனர். தமிழில் மறைந்த கவிக்கோஅப்துல்ரஹ்மான்  ஹைக்கூவில் மிகப் பெரிய நிபுணர் ஆவார். மிகப் ஹைக்கூ கவிதைத் தொகுப்பை அவர் வெளியிட்டுள்ளார்.


ஜப்பானிய மொழியில் இதை ஒரு வரியில் எழுதுவார்கள். ஆங்கிலத்தில் 3 வரிகளில் எழுதுகிறார்கள். சிலர் 5 வரிகள் வரை எழுதுவதும் உண்டு. ஹைக்கூ கவிதைகளில்  பொதுவாக ரைமிங் வடிவம் இருக்காது. கடைசி வரியில்தான் கவிதையை புரிய வைப்பார்கள். நம் நாட்டில் பள்ளி மற்றும் கல்லூரி பாடதிட்டத்தில் ஹைக்கூ கவிதைகள் உள்ளன. ஹைக்கூ கவிதைகள் சிந்தனையாளர்களின் படைப்பாற்றலை மேம்படுத்த உதவுகிறது. ஹைக்கூ கவிதைகள் பொதுவாக இயற்கை, காதல், மனிதனின் அனைத்து உணர்வுகளையும் வெளிப்படுத்த உதவுகிறது. 


ஹைக்கூ கவிதைகளை சிறிய வயதினர் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் மிகவும்  எளிதாக படித்து புரிந்து கொள்ளலாம். இதுதான் ஹைக்கூவின் சிறப்பம்சமாகும். மனக் கிடக்கைகளை, கற்பனை கலந்து கொடுக்கும் ஹைக்கூ கவிதைகளை நீங்களும் பழகுகங்கள், எழுதுங்கள்.. மன சந்தோஷத்தை அனுபவியுங்கள்.


- சுஜித்ரா