இன்னிக்கு என்ன நாள் தெரியுமா.. நம்ம வீட்டு தங்க மகளை கொண்டாடுவோம்!

Su.tha Arivalagan
Oct 11, 2023,11:01 AM IST

- செல்லலட்சுமி


இன்று... சர்வதேச பெண் குழந்தைகள் தினம்!


  • கடவுள் அருளால் பிறப்பது மகன் என்றால், கடவுளே வந்து பிறப்பது தான் மகள். மகள் பிறந்தாளே, செலவு பிறந்துருச்சு.. சீர் வரிசை செஞ்சே நொடிச்சுப் போய்ருவோமே என்று அந்தக் காலத்தில் வீட்டில் இருந்த பாட்டிமார்கள் புலம்புவதைக் கேட்டிருப்போம். அம்மாக்களும் கூட கவலைப்படவே செய்தார்கள்.  கவலைப்பட்டு அழுத காலம் இப்ப மலையேறிப் போயிருச்சு.


இப்ப எல்லாமே மாறிப் போயிருச்சு.. எனக்கு மகள் வேண்டுமென்று கடவுளிடம் கேட்காத பெற்றோர்களே இல்லை.  அப்படி விரும்பிப் பெற்று மகிழ்ந்து அந்த மகளை போற்ற ஆரம்பித்து விட்டது உலகம்.




பெற்ற மகளை "மகாராணி", "மகாலெட்சுமி", "Princess", "Angel","குலசாமி"ன்னு கொண்டாடி வருகிறார்கள் பெற்றோர்கள். தந்தையானவனோ ஒரு படி மேலே போய் என்னை பெற்ற தாய் என்கிறான் தன் மகளை.


மகள் வந்த பிறகு தாய், தாரமெல்லாம் காணாமல் போய் விடுகிறார்கள். மகள் அன்பே போதும், மகள் அதிகாரமே வாழ்கை என்று அந்த அன்புக்கு அடிமை ஆகிப் போய் விடுகிறான் தந்தை. இன்று "Dad's little princess" என்று அப்பா மகள் உறவு பலம் பெற்றுள்ளது.


தன் அன்பான மகளை பாடம் படிக்க பள்ளிக்கு அணுப்பும் பிரிவை கூட தாங்க முடியாமல் மனம் இல்லாமல் அனுப்புகிறான் பெற்றவன். தாரை வாத்து கொடுக்கும் போது உயிரே தன்னை விட்டுப் போவது போல உணர்கிறான் தந்தை.


அன்று மகளை கரை சேர்க்க பணம் வேண்டுமென்று பயந்தவன், இன்று மகளை கரை சேர்க்கும் வரை  பாதுகாப்பு வேண்டுமென்று பயப்படுகிறான். நல்லபடியாக கரை சேர்த்தும் கூட, தன் மகள் தன் வீட்டில் இருந்தது போல ராணி மாதிரி இருக்கிறாளா என்று அலைமோதுகிறான் தங்தையானவன்... தான்  "ராணி"யாக போற்றிய மகளுக்கே மகள் பிறக்கும்போது அந்த குட்டி இளவரசி பின்னால் போய் விடுகிறான்.. அந்த சுவாரஸ்யமும் நடக்கத்தான் செய்யுது.!


பெண் என்பவளை பூ மாதிரி, சாமி மாதிரி, ராணி மாதிரி என்றெல்லாம் சொல்லி கண்ணுக்குள் வைத்து வளர்ப்பது ஒருபக்கம் இருந்தாலும், அவளுக்குள் தைரியத்தையும் ஊட்டி வளர்க்க நாம் தவறக் கூடாது.. கண்ணும் கருத்துமாய் வளர்க்கும் அதே வேளையில், தைரியம், நம்பிக்கை, கல்வி, சமூக அக்கறை, பொறுப்பு, கடமை என எல்லாவற்றையும் அணிகலன்களாக அணிவித்து வளர்க்கும்போது அந்தப் பெண் ஒரு சமூகத்தையே தாங்கிப் பிடிக்கும் திறத்துடன் வளர்கிறாள்.


பெற்றோரும் சமூகமும் பெண் பிள்ளைகளை தைரியமாகவும் பாதுகாப்பாகவும் மரியாதையுடனும் வளர்போம்.. பெண்மையை போற்றுவோம்... பெண்களைப் போற்றுவதோடு, பெண்களை மதிக்க வேண்டும் என்பதை கூடவே வளரும் ஆண் பிள்ளைகளுக்கும் சொல்லி வளர்ப்போம்.