திடீர்னு புயல் வந்தா.. எப்படி சமாளிப்பீங்க?

Meena
Oct 13, 2023,04:04 PM IST

- மீனா


சென்னை: இன்று தேசிய இயற்கை பேரிடர் குறைப்பு தினம்.. அது இயற்கை பேரிடரைக் குறைக்க ஒரு தினமா என்று நீங்க கேட்கக் கூடும்.. இருக்குங்க.. வாங்க பார்க்கலாம்.


இயற்கை ஏற்படுத்தும் பேரழிவுகளை எப்படி குறைக்கலாம் என்று மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த  ஐக்கிய நாடுகளின் கல்வி அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு 1989ல் அக்டோபர் 13ஆம் தேதி பேரிடர் குறைப்புக்கான சர்வதேச  தினத்தை உருவாக்கியது. உலகெங்கிலும் உள்ள மக்கள் பேரழிவுகளின் மூலம் ஏற்படும் சேதத்தை குறைக்கவும், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளும் நோக்கத்தோடு தான் இந்த நாள் உருவானது. 




இயற்கை பேரழிவுகளை நாம் யாரும் விரும்ப மாட்டோம். ஆனால் இவ்வாறு எதிர்பாராத வண்ணம் ஏற்படும் இயற்கை பேரழிவுகளை எதிர்கொள்ளவும்  பேரழிவு ஏற்படும் சமயத்தில் எடுக்கப்படும்  நடவடிக்கைகள் மூலம்  வீரியத்தை குறைப்பதற்காகவே எப்பொழுதும் தயாரான நிலையில் இருக்க  இந்த தினத்தை கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. முதலில் இயற்கை  பேரிடரை குறைப்பதற்கு சிறந்த வழி என்றால் ஒவ்வொரு இயற்கை பேரிடரையும் பற்றி ஒரு தெளிவான சிந்தனை நமக்கு இருக்க வேண்டியது அவசியம்.


ஏனென்றால்  இயற்கை பேரழிவின் மூலம் ஏற்படும் ஆபத்துக்களை நாம் உணர்ந்து அவற்றை குறைப்பதற்கும், அவற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கும் நாம் எப்பொழுதும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.  ஏனென்றால் இயற்கை பேரழிவுகள் தன்னிச்சையானவை என்றாலும் கூட்டு முயற்சிகள் மூலம் அவற்றை  கையாளவும் அதன் மூலம் ஏற்படும் சேதத்தை  குறைந்ததாக மாற்றவும் முடியும். பேரழிவு அபாயத்தை எப்படி குறைப்பது என்று அறிந்து கொள்வதற்கும் ஆண்டு முழுவதும் நடந்த பேரழிவுகளில் இருந்து நாம் அனேக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கற்றுக்கொள்ளலாம்.


இயற்கை பேரிடர்களின் வகைகள்:


நிலநடுக்கம்

சுனாமி

காட்டு தீ

புயல்

எரிமலை வெடிப்பு 

வெள்ள அபாயம்

நிலச்சரிவு


இயற்கை, அதற்குப் புறம்பாக மாறும்போது பெரும் பேரழிவை ஏற்படுத்துகிறது. இதனால் உயிர்ச்சேதம் மட்டுமல்லாமல் பொருட் சேதமும் ஏற்படுகிறது. இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. பல நேரங்களில் அந்தப் பகுதியே நிர்மூலமாகி விடும் அபாயத்தையும் நாம் பார்க்கிறோம்.


இதுபோன்ற சமயங்களில் நாம் எப்படி செயல்பட வேண்டும், என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், பொருட் சேதத்தையும்,உயிர்ச் சேதத்தையும் தடுக்க என்ன செய்யலாம் என்பது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்தத் தினம் கொண்டாடப்படுகிறது.


மேலும் இயற்கைப் பேரிடர் தொடர்பாக அரசாங்கம் கொடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்பதே முக்கிய நோக்கமாகும். ஆனால் சென்னையில் ஒரு புயல் வெள்ளக் காலத்தின்போது மக்கள் கடற்கரைக்கு சென்று குமுறிக் கொண்டிருந்த கடலுக்கு அருகே நின்று செல்பி எடுத்து விளையாடியதையும் நாம் பார்த்தோம். இதுபோன்ற சமயங்களில் இப்படி பொறுப்பில்லாமல் நடக்க மக்கள் முயற்சிக்கக் கூடாது. நாமே முன்வந்து பொறுப்புணர்வுடன் நடக்க வேண்டும். அப்போதுதான் சேதங்களைத் தவிர்க்க முடியும்.


என்ன மக்களே, சரியா?