சிட்டுக் குருவி சிறகடித்து.. இன்னிக்கு என்ன நாள் தெரியுமா.. உலக சிட்டுக் குருவிகள் தினம்!

Su.tha Arivalagan
Mar 20, 2024,03:16 PM IST

சிறு குழந்தை முதல் பெரியவர் வரை அனைவரும் பார்த்து ரசித்த சிறியப் பறவைகளில் ஒன்றுதான் சிட்டுக்குருவி. பார்ப்பதற்கு அழகாகவும் காணும் இடங்களில் எல்லாம் அதன் இனிமையான குரலும் செவிக்கு இனிமை தருவதாகவும் இருக்கும்.


சிட்டுக்குருவியை வைத்து எத்தனையோ கவிஞர்கள் எத்தனையோ பாடல்களைப் பாடியுள்ளனர். பார்க்கவே மகிழ்ச்சி தரும் சந்தோஷமான பறவை சிட்டுக் குருவி. 


சிட்டுக்குருவி வீடுகளில் கூடு கட்டினால் அக்குடும்பம் வாழையடி வாழையாக செழித்து வளரும் என்பது நம்முடைய  நம்பிக்கை. அதனால் தான் குருவிக்கூடு இருந்தால் யாருக்கும் அதைக் கலைக்க மாட்டார்கள். மனதும் வராது. அதை செய்யவும் மாட்டார்கள்.




சிட்டுக்குருவி வெளிர் பழுப்பு மட்டும் சாம்பல் நிறத்திலும் மற்றும் பிரகாசமான கருப்பு, வெள்ளை மற்றும் பழுப்பு அடையாளங்களுடன் அழகிய தோற்றத்தில் காணப்படும். பெரும்பாலும் சிட்டுக்குருவியானது வீடுகளில் உள்ள மாடம் , பரன் , ஓடுகளின் இடுக்குகளில் உள்ள இடைவெளிகளில் அதிகமாக கூடு கட்டி வசிக்கும்.


சிட்டுக்குருவிகள் உணவு தானியங்களை தவிர புழு, பூச்சிகள், வெட்டுக்கிளிகள் போன்ற விளைச்சலைப் பாதிக்கும் பூச்சியினங்களையும் சாப்பிடுகின்றன. ஆனால் வயல்வெளிகளில் விவசாயிகள் ராசாயன வாயு பயன்படுத்துவதால் சிறு புழு, பூச்சிகள் கிடைப்பதில்லை. இதுவும் சிட்டுக்குருவி அழிவுக்கு காரணமாக கருதப்படுகிறது.


மக்கள் இப்போது கிராமங்களில் இருந்து நகரங்களில் குடியேறுவதால் சிட்டுக்குருவிகள் வசிக்க சிரமம் ஏற்படுகிறது. கிராமத்தில் இருக்கும் அமைதி , இயற்கை சூழ்நிலை நகர்ப்புறங்களில் இல்லை. பராமரிக்க  எளிதாக இருக்கும், எளிதில் வளரும் என்று நாம் வெளிநாட்டு தாவரங்களை வீட்டில் வளர்க்கின்றோம். இதனால் சிட்டுக்குருவிகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்படுகின்றது இதுவும் சிட்டுக்குருவி அழிவுக்கு இன்னொரு காரணமாக கருதப்படுகின்றது.


மொபைல் போன் டவர்களில் இருந்து வரும் நுண்ணிய கதிரியக்கம் சிட்டுக்குருவியின் கருவை சிதைக்கும் அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது. இதுவும் சிட்டுக்குருவி அழிவுக்கு காரணமாக கருதப்படுகின்றது.       சிட்டுக்குருவிக்கு பல பெயர்கள் உண்டு. அடைகலாங்குறுவி, ஊர் குறுவி, வீட்டுக்குருவி என்றும் குறிப்பிடுவர். சிட்டுக்குருவி ஆங்கிலத்தில் sparrow, House sparrow என்றும் அழைக்கப்படுகிறது.


சிட்டுக்குருவிகள் 1மணி நேரத்தில் சுமார் 38கி.மீ (24 மைல்) வேகத்தில் பறக்கின்றன. அவசர காலத்தில் சுமார் 50கி.மீ (31 மைல்)வேகத்தில் பார்க்கக்கூடிய திறன் கொண்டவை. டெல்லி அரசு 2012 ஆம் ஆண்டு சிட்டுக்குருவியை தங்கள் மாநில பறவையாக அறிவித்தது. தி நேச்சர் அக் பரேவர் சொசைட்டி என்று அமைப்பின் நிறுவனர் முகமது என்பவரால் உலக சிட்டுக்குருவி தினமானது கொண்டு வரப்பட்டது.


சிட்டுக்குருவியின் வாழ்க்கை முற்றிலும் மனிதர்களை சார்ந்து இருக்கிறது. நாம் முன்பெல்லாம் வீட்டில் தானியங்களை பதப்படுத்தி பயன்படுத்துவோம். அதில் உள்ள கழிவுகள் வீணாகுவதை சிட்டுக்குருவிகள் உண்கின்றன . ஆனால் இப்பொழுது பாக்கெட் தானியங்களை பயன்படுத்துவதால்  சிட்டுக்குருவி போதிய உணவில்லாமல் நம்மிடம் இருந்து விலகுகிறது.  எனவே மனிதனின் வாழ்க்கை முறை மாறும் போது சிட்டுக்குருவிகள் தாக்குப் பிடிக்க முடியாத நிலைக்கு மாறுகின்றன.


இனிமேலாவது சிட்டுக்குருவியை நம் குடும்பத்தில் ஒருவராக நினைத்து இயற்கையை உருவாக்குவோம், மாடித்தோட்டம் அமைப்போம். சிறு பாத்திரத்தில் தண்ணீர் வைப்போம்.அவற்றைக் காக்க உலக சிட்டுக்குருவிகள் தினமான மார்ச் 20 இருந்து  உறுதிமொழி எடுப்போம்.


கட்டுரை: சந்தன குமாரி