இன்று ஆடி பெளர்ணமி 2024 : ஆடித்தபசு, குரு பூர்ணிமாவில் இப்படி வழிபடுங்க.. நல்லது நடக்கும்!

Aadmika
Jul 21, 2024,12:09 PM IST

சென்னை : அம்மன் வழிபாட்டிற்குரிய ஆடி மாதத்தில் வரும் மிக முக்கியமான விஷேகங்களில் ஒன்று ஆடிப்பெளர்ணமி. அதிலும் இந்த ஆடி முதல் ஞாயிற்றுக்கிழமையில் அமைந்துள்ளது மிகவும் விசேஷமானதாகும். ஜூலை 21ம் தேதியான இன்று ஆடி பெளர்ணமி, ஆடி முதல் ஞாயிறு, உத்திராடம் நட்சத்திரம், சங்கரன்கோவில் ஆடித்தபசு, குரு பூர்ணிமா ஆகிய அனைத்தும் சேர்ந்தே வருவது மிகவும் சிறப்பானதாகும்.


ஆடி ஞாயிற்றுக்கிழமை அம்மனுக்கு மிகவும் விசேஷமானதாகும். இந்த நாளில் அம்மன் கோவில்களில் கூழ் படைத்து வழிபடும் வழக்கம் உள்ளது. அதே போல் ஆடிப் பெளர்ணமி சிவ வழிபாட்டிற்கு மிகவும் சிறப்பானதாகும். ஆடிப் பெளர்ணமியில் சிவனுக்கு திரட்டுப்பால் அபிஷேகம் செய்து, கருப்பு பட்டை அணிவித்து, கரு ஊமத்தம்பூ மாலை சாற்றி, மூங்கில் அரிசி பாயசம் படைத்து வழிபட்டால் எப்படிப்பட்ட பகையும் தீரும். ஆடிப் பெளர்ணமி அன்று சிவன் கோவிலுக்கு சென்று ஒரு விளக்கேற்றினால் பல ஆயிரம் விளக்குகள் ஏற்றி வழிபட்ட வலன் கிடைக்கும். நீர் நிலைகளுக்கு சென்று தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பானது.




ஆடிப் பெளர்ணமி என்றாலே அதோடு சேர்ந்து வரும் மற்றொரு விசேஷம் ஆடித்தபசு. சங்கரன்கோவிலில் ஆண்டுதோறும் ஆபத்தபசு திருவிழா, தேரோட்டத்துடன் வெகு சிறப்பாக நடத்தப்படும். சங்கன்,பதுமன் என இரு நாக அரசர்களுக்கு இடையே சிவன் பெரியவரா? பெருமாள் பெரியவரா? என்ற விவாதம் ஏற்பட்டது. இதை தீர்ப்பதற்காக அம்மனிடம் சென்று கேட்டதற்கு, அவர் இருவருமே ஒருவர் தான் என்றார். அதோடு உரிய காலம் வரும் போது அனைவரும் இது தெரிய வரும் என்றார். சிவனும், விஷ்ணுவும் ஒன்று தான் என்பதை அனைவருக்கும் உணர்த்த இருவரும் ஒன்றாக வந்து காட்சி தர வேண்டும் என சிவனிடமும் வேண்டினார். அப்படி ஒரு உன்னதமான வரத்தை பெறுவதற்காக பார்வதியை தவம் செய்யும் படி சொன்னார் சிவ பெருமான்.


இதனை ஏற்று பசு ரூபத்தில் வந்த தேவ மங்கையருடன் கோமதி அம்மனாக சென்று புன்னை வனத்தில், ஊசி முனையில் ஒற்றைக் காலில் நின்று தவம் செய்த பார்வதி தேவிக்கு ஆடிப் பெளர்ணமி நாளில், சிவன் பாதியும், விஷ்ணு பாதியும் இணைந்த ஒரே ரூபமாக சங்கரநாராயணராக காட்சி அளித்த நாள் ஆடி பெளர்ணமி. அம்மன் தவம் செய்து வரம் பெற்ற நாள் என்பதால் இதை ஆடித்தபசு என கொண்டாடுகிறோம். அண்ணனாகிய விஷ்ணு, பாதி உடலில் இருப்பதால் சிவனை திருமணம் செய்ய முடியாது என்பதால், அதற்காக மீண்டும் தவம் இருந்து, சிவனை மணந்தார் பார்வதி. அம்பிகை தவம் செய்து, வரம் பெற்ற நாளில் சங்கரநாராயணனரையும், கோமதி அம்மனையும்  தரிசனம் செய்தால் திருமணம் வரம், குழந்தை வரம், நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம்.


ஆடிப் பெளர்ணமி நாளில் திருவண்ணாமலை கிரிவலம் செல்வதும், குரு பூர்ணிமா என்பதால் குருமார்களை சந்தித்து ஆசி பெறுவதும் மிகவும் விசேஷமானதாகும்.