இன்று ஆடி முதல் வெள்ளி.. கூடவே சுக்கிரவார பிரதோஷம்.. இப்படி வழிபடுங்க வாழ்க்கையே மாறும்!

Aadmika
Jul 19, 2024,09:58 AM IST

சென்னை :   ஆடி மாதம் அம்மனுக்குரிய மாதமாகும். இந்த மாதத்தில் வரும் அனைத்து நாட்களும் அம்மனை வழிபட்டு அருள் பெறுவதற்குரிய சிறப்பான நாளாகும். அதிலும் அம்மன் வழிபாட்டிற்குரிய மங்கலகரமான நாளான வெள்ளிக்கிழமை ஆடி மாதத்தில் வரும் போது கூடுதல் சிறப்பு பெறுகிறது. ஆடி மாதத்தில் வரும் ஐந்து வெள்ளிக்கிழமைகளும் அம்மனுக்கு பூஜைகள் செய்து, வழிபட்டால் நாம் வேண்டிய வரங்களை அம்மன் அளிப்பாள் என்பது நம்பிக்கை.


இந்த ஆண்டு ஆடி முதல் வெள்ளிக்கிழமை ஜூலை 19ம் தேதியான இன்று அமைந்துள்ளது. செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமிக்கும், சுக போக வாழ்க்கை அருளும் கிரகமான சுக்கிர பகவானுக்கும், மங்கலங்கள் தரும் அம்பிகைக்கும் உரிய வெள்ளிக்கிழமையில் சிவ பெருமானுக்குரிய பிரதோஷமும் இணைந்து வருகிறது. அதனால் இது மிக முக்கியமான நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் செய்யப்படும் வழிபாடு, பூஜைகள் உள்ளிட்ட அனைத்தும் இரு மடங்கு பலனைக் கொடுக்கும்.




பிரதோஷ விரதம் என்பது அனைத்து விதமான பாவங்களையும், தோஷங்களையும் நீக்கி, சந்தோஷத்தை வழங்கக் கூடியதாகும். அது வெள்ளிக்கிழமையில் வருவது சிறப்பு. இந்த நாளில் சிவனுக்கு, மகாலட்சுமியின் அம்சமான வில்வ இலையால் அர்ச்சனை செய்து வழிபடுவது மிக சிறப்பானதாகும். இன்று ஆடி வெள்ளி என்பதால் திருவிளக்கிற்கு பூஜை செய்வதும், அம்பாளுக்கும் திருவிளக்கிற்கும் குங்கும அர்ச்சனை செய்து வழிபடுவது சிறப்பு. லலிதா சகஸ்ரநாமம் படித்து வழிபடுவது மிக நல்லது.


கடன் பிரச்சனை உள்ளிட்ட வாழ்க்கையில் உள்ள பலவிதமான பிரச்சனைகள் தீர வேண்டும் என்பவர்கள் இன்று ராகு கால நேரமான காலை 10.30 முதல் 12 மணி வரையிலான நேரத்தில் துர்க்கை அம்மனுக்கு நெய் விளக்கேற்றி, செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடலாம். வருமானம் வர வேண்டும், வாழ்வில் முன்னேற்றம், வளர்ச்சி ஏற்பட வேண்டும் என்பவர்கள் சுக்கிர ஓரை வேளைகளான காலை 6 முதல் 7, பகல் 1 முதல் 2, இரவு 8 முதல் 9 ஆகிய நேரங்களில் மகாலட்சுமிக்கு தாமரை மலர் படைத்து அர்ச்சனை செய்து வழிபடலாம். இன்று சுக்கிரவார பிரதோஷம் என்பதால் மாலை 6 மணிக்கு வீட்டில் விளக்கேற்றி, அம்மனுக்குரிய துதிகளை பாடி வழிபடுவது சிறப்பு.


ஆடி முதல் வெள்ளிக்கிழமையான இன்று வீட்டில் உள்ள பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் தீர்ந்து, வளர்ச்சி ஏற்பட பெண்கள் அம்மனுக்கு விருப்பமான மஞ்சள், சிவப்பு நிறங்களில் ஆடை உடுத்தி பூஜை செய்வது பல மடங்கு பலனை தரும். அதே போல் ஆண்கள், சிவ பெருமானுக்குரிய வெள்ளை, காவி அல்லது நீலம் நிறங்களில் உடை அணிவது சிறப்பு. வீட்டில் உள்ள அனைவரும் இந்த நிறங்களில் உடை அணிவது சிறப்பு. அப்படி முடியவில்லை என்றால் குடும்ப தலைவிகள் மட்டுமாவது இந்த நிறத்தில் உடை அணிவது சிறப்பு.