கிளாம்பாக்கத்திலிருந்து 90 பஸ்கள், கோயம்பேட்டிலிருந்து.. 85.. திருவண்ணாமலைக்கு .. அசத்தல் அறிவிப்பு!

Manjula Devi
May 17, 2024,06:54 PM IST

சென்னை: சென்னை கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையங்களிலிருந்து தினசரி 175 பேருந்துகள் திருவண்ணாமலைக்கு இயக்கப்படவுள்ளதாக சூப்பரான அறிவிப்பு வெளியாகியுள்ளது.


திருவண்ணாமலைக்கு அதிக அளவில் தினசரி பேருந்துகள் இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில், வரும் மே 23ஆம் தேதி முதல் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து  திருவண்ணாமலைக்கு தினசரி 85 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. அதேபோல கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து 90 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.


தமிழ்நாட்டில் தற்போது பள்ளி மாணவ மாணவியர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள், சுற்றுலா தளங்கள், கோயில்கள், மற்றும் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். அந்த வரிசையில் சென்னைலிருந்து தினசரி திருவண்ணாமலைக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று வருகின்றனர். இது தவிர பணி நிமித்தமாக  திருவண்ணாமலையில் இருந்து  சென்னைக்கு தினசரி ஏராளமான மக்கள் வருகிறார்கள்.




தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தற்போது கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள் இயக்கி வருகிறது. குறிப்பாக திருவண்ணாமலை செல்லும் பயணிகள் பெரும்பாலானவர்கள் கோயம்பேடு மார்க்கெட் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வேலை செய்து வருகின்றனர்.


இந்த நிலையில் திருவண்ணாமலை வழித்தட பேருந்துகளை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு வரும் மே 23ஆம் தேதி முதல் சென்னை கோயம்பேட்டில் இருந்து 85 பேருந்துகள் தினசரி திருவண்ணாமலைக்கு இயக்கப்படும் என அறிவித்துள்ளது. அதாவது, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 44 பேருந்துகள் ஆற்காடு, ஆரணி வழியாகவும், மற்றும் தற்போது தினசரி கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து காஞ்சிபுரம், வந்தவாசி, வழியாக இயக்கப்படும் 11 பேருந்துகளுடன் கூடுதலாக 30 பேருந்துகள்  இயக்கப்பட உள்ளது 


மேலும் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து திண்டிவனம், செஞ்சி வழியாக 50 பேருந்துகள் இயக்கப்படும். என்றும் போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.