மக்கள் ஜம்முன்னு மகா சிவராத்திரியை கொண்டாட.. இன்று முதல் மார்ச் 10 வரை சிறப்பு பேருந்துகள்!

Manjula Devi
Mar 07, 2024,11:12 AM IST

சென்னை: நாளை மகா சிவராத்திரி மற்றும்  வார இறுதி நாட்களை முன்னிட்டு இன்று முதல் மார்ச் 10ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தமிழக அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.


நாளை வெள்ளிக்கிழமை மகா சிவராத்திரி. இதற்காக மக்கள் இன்று முதல் தங்களின் குலதெய்வத்தை வணங்குவதற்காக சொந்த ஊருக்கு பயணிப்பது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் மகா சிவராத்திரியுடன் சனி மற்றும் ஞாயிறு வார இறுதி வருவதால் மக்கள் பேருந்துகளில் பயணிக்க கூட்டம் அலைமோதும். 


இதனை தடுக்க தமிழக போக்குவரத்து துறை தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க  முடிவு செய்துள்ளது. இதன் அடிப்படையில் இன்று முதல் மார்ச் 10 ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கவுள்ளதாக அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.




கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, நெல்லை, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர், ஆகிய பகுதிகளுக்கு இன்று 270 சிறப்பு பேருந்துகளும், நாளை 300 பேருந்துகளும், மார்ச் 9ஆம் தேதி 430 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.


கோயம்பேட்டில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூருக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் 70 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இது தவிர பெங்களூர், திருப்பூர், ஈரோடு, மற்றும் கோவையிலிருந்து பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.


மேலும் சிறப்பு பேருந்துகளில் பயணிகள் சரியாக பயணம் செய்கிறார்களா.. அவர்களுக்கு இடையூறு எதுவும் வருகிறதா.. அல்லது சிறப்பு பேருந்துகளை முறையாக இயக்கப்படுகிறதா.. என்பதை கண்காணிக்க பேருந்து நிலையங்களில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளன.