டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல் நிலை தேர்வு முடிவு வெளியானது.. டிசம்பர் 10ம் தேதி முதன்மைத் தேர்வு

Meenakshi
Sep 02, 2024,05:00 PM IST

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. டிசம்பர் 10ம் தேதி முதன்மைத் தேர்வு நடைபெறவுள்ளது.

தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை போட்டித்தேர்வுகள் மூலம் டிஎன்பிஎஸ்சி நிரப்பி வருகிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 தேர்வு தமிழகம் முழுவதும் கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. இந்த தேர்வுக்கான அறிவிப்பை கடந்த  மார்ச் மாதம் 28ம் தேதி வெளியிடப்பட்டது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த ஏப்ரல் மாதம் நிறைவு பெற்ற நிலையில், இத்தேர்வை 2 லட்சத்து 38 ஆயிரத்து 247 பேர் தேர்வு எழுத தகுதியானவர்களாக அழைக்கப்பட்டனர். தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்டங்களில் இத்தேர்வு நடந்தது.



இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல் நிலை தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இந்த முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், வரும் டிசம்பர் மாதம் 10 முதல் 13ம் தேதி வரை சென்னையில் உள்ள மையத்தில் நடைபெறும் முதன்மை எழுத்துத் தேர்வில் நேரடியாக கலந்து கொள்கிறார்கள். தேர்வு நடைபெற்ற 50 நாட்களுக்குள்ளாகவே குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது.

இந்த தேர்வில் எடுக்கப்படும் மதிப்பெண்கள் பணி நியமனத்திற்கு எடுத்துக்கொள்ளப்படாது. முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு இடஒதுக்கீடு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்