குடியரசு தின விழா.. ஆளுநர் மாளிகை தேநீர் விருந்து.. புறக்கணிப்பதாக காங்கிரஸ் அறிவிப்பு

Su.tha Arivalagan
Jan 23, 2025,05:01 PM IST

சென்னை: குடியரசு தின விழாவையொட்டி ஆளுநர் மாளிகை அளிக்கும் தேநீர் விருந்து நிகழ்ச்சியை புறக்கணிப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.


கடந்த  சில ஆண்டுகளாகவே திமுக கூட்டணிக் கட்சிகள் ஆளுநர் மாளிகையில் அளிக்கப்படும் தேநீர் விருந்து நிகழ்ச்சிகளை புறக்கணித்து வருகின்றன. குறிப்பாக சுதந்திர தின விழா, குடியரசு தின விழாவின்போது ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்படும்.


தமிழ்நாடு அரசின் சார்பில் முதல்வர், அமைச்சர்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பல்துறைப் பிரமுகர்கள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொள்வார்கள்.




இந்த வருட குடியரசு தின விழா தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை விடுத்துள்ள அறிவிப்பில், ஆர்.என்.ரவி அவர்கள் தமிழ்நாடு ஆளுநராக பதவியேற்றதில் இருந்து தமிழர்களின் நலனுக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசுக்கும் எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். 


அவரது செயல்பாடுகளால் தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க முடியவில்லை.  சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் வேண்டுமென்றே காலம் தாழ்த்துகிறார். 


இவரின் செயல்பாடுகளை கண்டிக்கும் வகையில் குடியரசு தின நாளில் அவர் அளிக்கும் குடியரசு தின வரவேற்பு நிகழ்ச்சியையும், தேநீர் விருந்தையும் தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கின்றோம் என்று தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்