"ராகுல் காந்தியை விட பிரதமர் மோடி பாப்புலர்".. பேட்டி அளித்த கார்த்தி.. நோட்டீஸ் விட்ட காங்கிரஸ்!

Su.tha Arivalagan
Jan 09, 2024,05:52 PM IST

சென்னை: தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில் சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கூறிய கருத்துக்கள் குறித்து காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநில ஒழுங்கு நடவடிக்கைக் குழு அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


சிபிஐ வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரமும், அவரது மகனும் எம்.பியுமான கார்த்தி சிதம்பரமும் சிக்கியுள்ளனர். இதுதொடர்பாக இருவரும் பலமுறை விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர். ப.சிதம்பரம் டெல்லியில் அவரது வீட்டில் வைத்து அதிரடியாக கைது செய்யப்பட்டதும் நினைவிருக்கலாம். கார்த்தி சிதம்பரமும் கூட முன்பு கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில் தற்போது கார்த்தி சிதம்பரத்திற்கு காங்கிரஸ் மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தந்தி டிவிக்கு கார்த்தி சிதம்பரம் ஒரு பேட்டி அளித்திருந்தார். அதில் ராகுல் காந்தியை விட பிரதமர் நரேந்திர மோடி பாப்புலரானவர் என்று கூறியதாக தெரிகிறது.  இதுதவிர காங்கிரஸ் கட்சி தீவிரமாக எதிர்த்து வரும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சரியானவை, அவற்றில் மோசடி நடப்பதாக கூறுவதை நான் நம்பவில்லை, அதன் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது என்றும் தனது பேட்டியில் கூறியிருந்தார்.




இந்த நிலையில்தான் தற்போது கார்த்தி சிதம்பரத்துக்கு காங்கிரஸ் கட்சியின் மாநில ஒழுங்கு நடவடிக்கைகக் குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாநில காங்கிரஸ் தலைவராக இருக்கும் கே.எஸ். அழகிரி, தீவிர ப.சிதம்பரம் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக் குழு நோட்டீஸ் அனுப்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ராகுல் காந்திக்கும், கார்த்தி சிதம்பரத்துக்கும் இடையே ஒரு விதமான லடாய் ஓடிக் கொண்டுள்ளதாக ஒரு பேச்சு ஏற்கனவே உண்டு. நாடாளுமன்றத்தில் கார்த்தி சிதம்பரத்தைப் பார்த்தும் பார்க்காதது போல ராகுல் காந்தி சென்றதாக கடந்த வருடம் ஒரு சர்ச்சை எழுந்தது.  மேலும் ராகுல் காந்தி எம்பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டபோது அதுகுறித்து கருத்து தெரிவிக்காமல், வெர்ட்லி விளையாடி அதுகுறித்து டிவீட் போட்டிருந்தார் கார்த்தி சிதம்பரம். அதுவும் சர்ச்சையானது. இப்படி தொடர்ந்து சர்ச்சைகள் வெடித்து வந்த நிலையில் தற்போது புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார் கார்த்தி சிதம்பரம்.


அதேசமயம், கார்த்திக்கு நோட்டீஸ் அனுப்ப மாநில ஒழுங்கு நடவடிக்கைக் குழுவுக்கு அதிகாரம் இல்லை. கட்சி மேலிடம்தான் அனுப்ப முடியும் என்று கார்த்தி சிதம்பரம் தரப்பு கூறியுள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக கார்த்தி சிதம்பரம் வந்து விடக் கூடாது என்று சிலர் செய்யும் சதிச் செயலே இது என்றும் அவர்கள் குமுறல் வெளியிட்டுள்ளனர்.