எப்ப வர்றீங்கன்னு சொன்னா.. 10 பேருக்கும் சாப்பாடு ரெடி பண்ணுவோம்.. காங்கிரஸை கலாய்த்த அண்ணாமலை!

Su.tha Arivalagan
May 22, 2024,05:50 PM IST

சென்னை: தமிழ்நாடு பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிடவுள்ளதாக அறிவித்துள்ள காங்கிரஸ் கட்சியை கலாய்த்துள்ளார் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை.


இதுதொடர்பாக அவர் ஒரு டிவீட் போட்டுள்ளார். அதில் மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தையை அவர் கலாய்த்துள்ளார். இதுதொடர்பாக அண்ணாமலை கூறுகையில், 


தமிழக பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக, காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் அறிவித்துள்ளதாக அறிந்தேன். எங்கள் அலுவலகம் வரவிருக்கும் தேதியை முன்பே அறிவித்தால், வரும் பத்து பேருக்கும், உணவு ஏற்பாடு செய்ய வசதியாக இருக்கும். 




மேலும், வரும் அனைவருக்கும், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி தமிழர்களுக்குச் செய்த துரோகங்கள் குறித்த புத்தகமும் பரிசாக வழங்கலாம் என்று இருக்கிறோம். எப்படி திமுகவும் காங்கிரஸும் தமிழினத்துக்கே எதிரியாக விளங்குகின்றன என்ற காணொளியையும், அன்றைய தினம் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றவும் முடிவு செய்துள்ளோம்.  


எனவே, காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் அவர்கள், எங்கள் மாநிலத் தலைமை அலுவலகம் வரவிருக்கும் தேதியை மட்டும்,  முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கலாய்த்துத் தள்ளியுள்ளார் அண்ணாமலை.


செல்வப்பெருந்தகை என்ன சொன்னார்.. என்ன பிரச்சினை?




ஒடிஷாவில் பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரத்தின்போது பேசுகையில் பூரி ஜெகன்னாதர் கோவில் பொக்கிஷ அறையின் சாவியை தமிழ்நாட்டுக்குக் கொண்டு போய் விட்டார்கள் என்று பேசியிருந்தார்.  அதேபோல உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரச்சாரத்தின்போது பேசும்போது, ஒடிஷாவை ஒரு ஒடியாக்காரர்தான் ஆள வேண்டும். தமிழர் ஆள முடியாது என்று பேசியிருந்தார். அதாவது  முதல்வர் நவீன் பட்நாயக்கின் வலதுகரமாக திகழும் வி.கே. பாண்டியனை மனதில் வைத்து இவ்வாறு பேசியிருந்தார் அமித்ஷா.


இந்தப் பேச்சுக்களுக்கு தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். தமிழ்நாட்டையும், தமிழர்களையும் அவமதிக்கும் வகையில் பிரதமரும், அமித்ஷாவும் பேசியிருக்கிறார்கள். அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் பாஜக தலைமை அலுவலகத்தை காங்கிரஸார் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவார்கள் என்று கூறியிருந்தார்.


இந்த பேட்டியைத் தொடர்ந்துதான் தற்போது பாஜக தலைவர் அண்ணாமலை கிண்டலாக டிவீட் போட்டுள்ளார்.