தமிழக பட்ஜெட் 2024-25:  பெண்கள், மாணவர்களுக்கு அரசு அறிவித்த அசத்தலான திட்டங்கள்!

Meenakshi
Feb 19, 2024,05:24 PM IST

சென்னை: தமிழக அரசின் பட்ஜெட்டில் இன்று பல முக்கியமான அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக புதுமைப் பெண் திட்டம், காலை உணவுத் திட்டம், தோழி விடுதி உள்ளிட்ட அறிவிப்புகள் மக்களை அதிகம் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று சட்டசபையில் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார். அதில் முக்கியமானது குறித்த ஒரு பார்வை.




புதுமை பெண் திட்டம் விரிவாக்கம்


புதுமை பெண் திட்டம் விரிவாக்கப்படுகிறது. இந்தத் திட்டமானது, முதலில் மணப்பெண்ணின் கல்வித் தகுதியை அடிப்படையாகக் கொண்டு 25,000 ரூபாய் நிதி உதவி 50,000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வந்தது. கடந்த 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டு ரூ.25,000 ரூ.50,000 நிதி உதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது. இதன்படி 4 கிராம், 8 கிராம் தங்கம் வழங்கப்பட்டது. பெண்களின் கல்வி நிலையை உயர்த்துதல் மற்றும் ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு அவர்களின் பெற்றோர்களுக்கு நிதி உதவி வழங்குதல் என்ற நோக்கத்துடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது.


மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவி திட்டம்தான் பின்னர் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் என மாற்றப்பட்டு அதன் பிறகு, புதுமைப்பெண் திட்டமானது. இத்திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்த மாணவிகளுக்கு உயர் கல்வி உறுதி திட்டத்தின் கீழ் மாதம் தோறும் ரூபாய் 1000 உயர்கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. மேலும், அரசு பள்ளிகளில் பயின்று அரசு கல்லூரி, அரசு உதவி பெறும் கல்லூரி, சுயநிதி கல்லூரிகளில் தங்களது உயர்கல்வியை தொடரும் மாணவிகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 


இன்று வெளியான தமிழக பட்ஜெட்டில் இத்திட்டத்தை மேலும் விரிவாக்கம் செய்ய ரூ.370 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக  அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். 


காலை உணவு திட்டம் விரிவாக்கம்


தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகள் படிக்கும் ஏழை, எளிய குழந்தைகளின் படிப்பினை ஊக்குவிக்கும் விதத்திலும், ஊட்டச்சத்து குறைபாட்டினை போக்கவும், கற்றல் இடைநிலை தவிர்க்கவும் 9ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையில் பயிலக்கூடிய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.  


2022 அண்டு சட்டப்பேரவையில் இதுதொடர்பான அறிவிப்பினையும் அவர் வெளியிட்டார். மாநகராட்சி, நகராட்சி, ஊரக, கிராம மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள 1  முதல் 5 வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு முதற்கட்டமாக காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தை விரிவாக்கம் செய்யும் நோக்கில் ரூ.600 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தங்கம் சென்னரசு தெரிவித்துள்ளார்.


இந்த இரு திட்டங்களும் மாணவ மாணவியருக்கு பெரும் பலன் தரும் திட்டமாகும். இதேபோல  தமிழ்நாடு முழுவதும் தோழி விடுதிகளை அதிகரிக்கவும் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தத் திட்டம் சொந்த ஊரை விட்டு வெளியூர்களுக்கு வந்து தங்கி வேலை பார்க்கும் பெண்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.


மத்தியில் பாஜகவும்  மாநிலத்தில் திமுகவும் பெண்களைக் குறி வைத்து ஏகப்பட்ட திட்டங்களை அறிவித்து வருகின்றன.  கடந்த 17 மற்றும் 18ம் தேதிகளில், டில்லியில் பாஜக.,வின் தேசிய கவுன்சில் மாநாடு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நட்நதது. அப்போது பிரதமர் நரேந்திர மோடி பேசிய முக்கியமான அம்சம் என்னவென்றால், பெண்களை வெறும் ஓட்டுக்களாக மட்டும் பார்க்காதீர்கள். அவர்கள் நம்முடைய தாய், சகோதரிகள். அவர்கள் தங்களின் ஓட்டுக்கள் மூலம் நமக்கு அளிக்கும் ஆதரவு தான் நம்முடைய கட்சிக்கு அவர்கள் தரும் ஆசிர்வாதம் என்று கூறி பெண்களை கவரும் விதத்தில் பேசியிருந்தார்.


மத்திய அரசும் பல்வேறு பெண்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதேபோல மாநில அரசும் பல பெண்கள் நலத் திட்டங்களை நடத்தி வருகிறது. பெண்களுக்கான உரிமைத் தொகைத் திட்டம், இலவச பேருந்து பயண சலுகை உளளிட்ட பல திட்டங்களை திமுக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இன்று வெளியான தமிழக பட்ஜெட்டிலும் புதுமைப்பெண் திட்டம் மற்றும் காலை உணவுத் திட்டம் ஆகிய இரு திட்டங்களும் பெண்களின் நலனுக்காகவே கொண்டு வரப்பட்டுள்ள திட்டமாகும். 


புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் பெண்களின் கல்வி நிலை உயர வழிவகை செய்ய ஏற்படுத்தப்பட்ட திட்டமாகும். காலை உணவு திட்டமும் வேலைக்கு செல்லும் பெண்களின் பணிச்சுமையை குறைக்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ள திட்டமாகும்.  நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்க உள்ள நிலையில் பாஜக பானியில் திமுகவும் பெண்களை கவரும் விதத்தில் திட்டங்களை அமல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.