தீபாவளி வருது.. ரெடியாகும் ஸ்பெஷல் பேருந்துகள்.  எப்போது முதல்?.. 28ம் தேதி தெரியும்!

Su.tha Arivalagan
Oct 18, 2023,03:01 PM IST
சென்னை:  தீபாவளிப் பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் இந்த முறையும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ள்ளன. எத்தனை பேருந்துகள் இயக்கப்படும், எப்போது முதல் இயக்கப்படும் என்பது குறித்து அக்டோபர் 28ம் தேதி  முடிவு செய்யப்படவுள்ளது.

இந்துக்களின் மிக முக்கிய பண்டிகையான தீபாவளி நவம்பர் 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் மக்கள்  புத்தாடை உடுத்தி, இனிப்புகள் பரிமாறி பட்டாசு வெடித்து தீபாவளியை சிறப்பாக கொண்டாடி மகிழ்வர். இதற்காக மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல பெரும்பாலானோர் திட்டமிடுவர்.



குறிப்பாக சென்னையிலிருந்து லட்சக்கணக்கானோர் தென் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்வார்கள். குடும்பம் குடும்பமாக இவர்கள் செல்வதால், பேருந்து நிலையங்களில் கூட்டம் அலைமோதுவது வழக்கம்.  இச்சூழ்நிலையை தடுக்க தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ஒவ்வொரு வருடமும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த வருடமும் கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு பேருந்துகள் இயக்குவது தொடர்பாக, ஆலோசனைக் கூட்டம் வருகின்ற அக்டோபர் 28ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் போக்குவரத்து அமைச்சர், போக்குவரத்துத் துறை செயலாளர், போக்குவரத்துக் கழகங்களின் இயக்குனர்கள் ஆகியோர் கலந்து கொண்டு முடிவெடுக்கவுள்ளனர். 

இந்தக் கூட்டத்தில், சென்னையிலிருந்து எந்த தேதிகளில்  பேருந்துகள் இயக்கப்படும், எத்தனை பேருந்துகள் என்பது குறித்து முடிவெடுக்கப்படவுள்ளது.