விவசாயிகள் நலனை மொத்தமாக அடகு வைத்து விட்டார் முதல்வர் ஸ்டாலின்.. அண்ணாமலை

Su.tha Arivalagan
Jun 13, 2024,06:11 PM IST

சென்னை: கர்நாடக காங்கிரஸ் அரசிடம், தமிழ்நாட்டு விவசாயிகளின் நலனை மொத்தமாக அடகு வைத்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.


ஜூன் 12ம் தேதி வழக்கமாக மேட்டூர் அணை திறக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு அணையில் நீர் இல்லாத காரணத்தால் விவசாயத்திற்குத் தண்ணீர் திறக்க முடியவில்லை. கர்நாடகம் உரிய நீரைத் திறந்து விடவில்லை. மழையும் போதிய அளவில் இல்லை. இந்த நிலையில் இதுகுறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:




காவிரி நீரில், கடந்த ஆண்டு கிடைக்கப் பெற்ற தண்ணீரின் அளவு 81.4 டிஎம்சி மட்டுமே. ஆண்டிற்கு 177.25 டிஎம்சி தண்ணீர் பெற்றிருக்க வேண்டிய தமிழகம், அதில் பாதி அளவைக் கூட பெறவில்லை என்பது, திமுக அரசின் கையாலாகாத்தனத்தைக் காட்டுகிறது. திமுக காங்கிரஸ் சந்தர்ப்பவாத இந்தியா கூட்டணியின் நலனுக்காக, தமிழக விவசாயிகளின் நலனை மொத்தமாக அடகு வைத்திருக்கிறார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 


காவிரியில் குறித்த அளவு நீர்வரத்து இல்லாததால், இந்த ஆண்டு ஜூன் 12 அன்று, விவசாயத்திற்காகத் திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை திறக்கப்படாமல், பாசனத்துக்கு நீர் இன்றி விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இது குறித்த எந்தக் கவலையும் இல்லை. தன்னை ஒரு டெல்டாக்காரன் என்று கூறிவிட்டு, வயலில் கான்கிரீட் சாலை அமைத்து நடக்கும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, விவசாயிகள் வேதனை எப்படிப் புரியும்? 


முதலமைச்சர் ஸ்டாலின், தனது கூட்டணி நலனுக்காக, தமிழக விவசாயிகள் நலனைப் புறக்கணிப்பதை நிறுத்திக் கொண்டு, உடனடியாக, காவிரி நீரில் தமிழகத்தின் பங்கைப் பெற்றுத் தரும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.