லோக்சபா தேர்தலுடன் சேர்த்து தமிழக சட்டசபை தேர்தல்.. ஷாக் கொடுத்த ஈபிஎஸ்

Aadmika
Apr 02, 2023,03:13 PM IST
விழுப்புரம் : 2024 ம் ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலுடன் சேர்த்து தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளது அரசியல் கட்சிகளுக்கு மட்டுமல்ல, தமிழக மக்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

அதிமுக பொதுச் செயலாளராக பதவியேற்ற பிறகு இன்று முதல் முறையாக தனது சொந்த ஊருக்கு சென்றார் எடப்பாடி பழனிச்சாமி. சென்னையில் துவங்கி, சேலம் வரை அவருக்கு பல இடங்களில் அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பல ஊர்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கட்சி கூட்டங்களிலும் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.

விழுப்புரத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, " லோக்சபா தேர்தலுடன் சேர்த்து தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. அதிமுகவை யாராலும் தொட முடியாது. வழக்குகளால் அச்சுறுத்தவும் முடியாது. அதிமுகவை சீண்டி பார்ப்பவர்கள் அழிந்து போவார்கள். தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி மலர பணியாற்றுவோம். கட்சியை சிறப்பாக வழிநடத்தி மீண்டும் அதிமுக ஆட்சியை மலர செய்வோம். 



அதிமுக மக்களுக்காகவே இயங்கும் என்ற ஜெயலலிதாவின் சபதத்தை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. ஜனநாயக மாண்புகளை காத்து நிற்கும் அதிமுக.,வின் பொதுச் செயலாளர் பொறுப்பை ஏற்பதில் பெருமிதம் கொள்கிறேன். எனது உழைப்பை, நேர்மையை அங்கீகரித்து வழங்கப்பட்ட பொறுப்பு, மக்களாட்சி தத்துவத்திற்கான அங்கீகாரம் என கட்சி தொண்டர்களிடம் பேசினார். 

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் 2021 ம் ஆண்டு தான் நடந்து முடிந்து, திமுக அரசு பொறுப்பேற்றது. 2026 ம் ஆண்டு ஏப்ரல் 6 ம் தேதி வரை நடப்பு அரசின் ஆட்சி காலம் உள்ளது. ஆனால் ஆட்சி காலம் முடிவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் தமிழக சட்டசபைக்கு தேர்தல் வரும் என எடப்பாடி பழனிச்சாமி பேசி உள்ளதால், சட்டசபை தேர்தல் முன்பே வரும் என்றால் அதிமுக அப்படி என்ன பிளான் வைத்துள்ளது. எதை வைத்து எடப்பாடி பழனிச்சாமி இப்படி பேசி உள்ளார் என அனைவருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது.