திருப்பதி கோவில் கொடி மரம் சேதம்.. ஏழுமலையானே என்ன இது.. பெருமாள் கோபத்தின் வெளிப்பாடா?

Aadmika
Oct 04, 2024,06:13 PM IST

திருப்பதி :   திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழாவிற்கான கொடியேற்றப்பட உள்ள நிலையில் தங்க கொடி மரத்தின் வளையம் உடைந்து விழுந்து சேதமடைந்துள்ளது. இது ஏழுமலையான் கோபத்தில் இருக்கிறார் என்பதன் வெளிப்பாடு தானா இது என பக்தர்களும், தேவஸ்தானமும் அதிர்ச்சியும், குழப்பமும் அடைந்துள்ளனர்.


திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அக்டோபர் 04ம் தேதி துவங்கி, அக்டோபர் 12ம் தேதி வரை ஆண்டு பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது. இதற்கான பிரம்மாண்ட ஏற்பாடுகள் திருப்பதியில் பல மாதங்களாக நடத்தப்பட்டு வந்தது. அக்டோபர் 03ம் தேதியான நேற்று இரவு அங்குரார்ப்பனம் எனப்படும் பந்தக்கால் நடும் நிகழ்வு நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து பிரம்மோற்சவத்தின் முதல் நாளான இன்று மாலை 05.45 மணிக்கு பிரம்மோற்சவத்திற்கான கொடியேற்றும் நிகழ்வும், இதைத் தொடர்ந்து ஆந்திர முதல்வர் சார்பில் ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்கும் நிகழ்வும் நடத்தப்பட உள்ளது.




ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சமர்பிப்பதற்காக இன்று மாலை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, திருப்பதி வர உள்ளார். முதல்வர் சார்பில் பட்டு வஸ்திரம் சமர்பிக்கப்பட்ட பிறகு இரவு 9 மணிக்கு துவங்கி, 11 மணி வரை உற்சவர் மலையப்ப சுவாமி, பெரிய சேஷ வாகனத்தில் நான்கு மாட வீதிகளில் வீதி உலா வரும் வைபவம் நடத்தப்பட உள்ளது. இன்று மாலை பிரம்மோற்சவத்திற்கு கொடி ஏற்றுவதற்காக கோவிலின் அர்ச்சகர்கள் இன்று பகல் 1 மணியளவில் கோவிலின் மையப் பகுதியில் அமைந்துள்ள தங்க கொடி மரத்தில் கயிறு பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கொடி மரத்தின் மேல் இருந்த வளையம் உடைந்து விழுந்துள்ளது.


கலப்பட லட்டும்.. கூடவே கலந்த அரசியலும்


வளையம் உடைந்ததால் கொடியேற்றத்திற்கான கயிறு பொருத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து உடைந்த வளையத்தை சரி செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. திருப்பதி லட்டு விவகாரம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சுப்ரீம் கோர்ட் இன்று தான் உத்தரவு பிறப்பித்திருந்தது. பிரம்மோற்சவத்திற்கு கொடி ஏற்றப் போகும் சமயம், முதல்வர் சந்திரபாபு நாயுடு கோவிலுக்கு வரப் போகும் நிலையில் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.


இது ஏழுமலையான் கோபத்தில் இருக்கிறார் என்பதை உணர்த்தும் அறிகுறியா என ஏழுமலையானின் தீவிர பக்தர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். ஆனால் இதற்கு முன்பும் சில ஆண்டுகளுக்கு முன் கனமழை, புயல் காரணமாக இதே போல் கொடி மரத்தின் வளையம் சேதம் அடைந்ததாக சொல்லப்படுகிறது.


திருப்பதி லட்டு விவகாரம் படிப்படியாக அரசியலாக மாறி விட்டது. இது பக்தர்களை பெரிய அளவில் முகம் சுளிக்க வைத்துள்ளது. உச்சநீதிமன்றமும் கூட இதை கடுமையாக கண்டித்திருந்தது என்பது நினைவிருக்கலாம். கடவுள்களை அரசியலை விட்டு விலக்கி வையுங்கள் என்று உச்சநீதிமன்றம் கோபத்துடன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்