ஏழு கொண்டலவாடா.. திருப்பதி லட்டு பிரசாதத்தில் கலப்படம்.. தடுக்க பவன் கல்யாண் தரும் ஐடியா!

Manjula Devi
Sep 20, 2024,11:28 AM IST

சென்னை:   திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலந்திருப்பதாக தேசிய பால் வள மேம்பாட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினை எதிர்காலத்தில் வராமல் தடுக்க சனாதன தர்ம பாதுகாப்பு வாரியத்தை அமைக்கப் போவதாக ஆந்திர மாநில துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாண் கூறியுள்ளார்.


ஆந்திராவின் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் ஆகும். இங்கு தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள்  ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர். உள்ளூர்களில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். 


திருப்பதி என்றாலே நம் நினைவுக்கு வருவது லட்டு தான். இங்கு தினசரி லட்சக்கான லட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த லட்டுவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அதன் சுவை நறுமணத்திற்காக விரும்பி சாப்பிட்டு வருகின்றனர். அதிலும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதம் மிகவும் புனிதமானதாக இந்துக்கள் கருதுகின்றனர். ஆனால் அங்கு வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில் நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்புகள் பயன்படுத்தப்படுவதாக  தகவல் வெளியான  நிலையில் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 




இதுகுறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறுகையில், திருப்பதி லட்டு பிரசாதத்தில் நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பு கலப்பதை கண்டு கடும் அதிர்ச்சியடைந்தேன். கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளை மதிக்காததை கண்டு முந்தைய முதல்வர் ஜெகன்மோகனும், அவரது கட்சியும் அவமானப்பட வேண்டும் என குற்றம்சாட்டி உள்ளார். இவரின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


இதற்கிடையே விலங்குகளின் கொழுப்பு கலப்பதற்கு வாய்ப்பே கிடையாது என தேவஸ்தானத்தின் முன்னாள் அறங்காவலர்  குழு தலைவர் சுப்பா ரெட்டி தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணைக்கு சிபிஐக்கு உத்தரவிட வேண்டும் என ஆந்திரா மாநில காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ் ஷர்மிளா வலியுறுத்தியுள்ளார். 


கடந்த ஜூலை 17ஆம் தேதி லட்டு பிரசாதத்தில் கலக்கப்படும் நெய்யை குஜராத்தில் உள்ள தேசிய பால்வள மேம்பாட்டு துறை அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது. அங்கு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட திருப்பதி லட்டுவில் நெய்க்கு பதிலாக மீன் எண்ணெய், மாட்டுக் கொழுப்பு, பன்றிக் கொழுப்பு, சோயா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் கலக்கப்பட்டு இருப்பதாக ஆய்வறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த அறிக்கையை தெலுங்கு தேசம் கட்சி  வெளியிட்டது. இதனால் தற்போது இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பேசு பொருளாக மாறி உள்ளது.


ஆந்திர உயர்நீதிமன்றத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வழக்கு


இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த உயர்நீதிமன்றமே கமிட்டியை அமைத்து உத்தரவிட வேண்டும் என்று கோரி ஆந்திர மாநில உயர்நீதிமன்றத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. விரைவில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.


சனாதன பாதுகாப்பு வாரியம் 


இந்த நிலையில் ஆந்திர மாநில துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாண், சனாதன தர்ம பாதுகாப்பு வாரியத்தை அமைத்தால்தான் இதுபோன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், சனாதன தர்ம பாதுகாப்பு வாரியத்தை அமைக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. நமது கோவலில்கள், அதன் இடங்கள், அதன் நடைமுறைகள், பிரசாதம் உள்ளிட்டவற்றின் புனிதம் பாதுகாக்கப்பட வேண்டும். திருப்பதி லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டிருப்பது பெரும் வேதனையைத் தருகிறது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்  ஆட்சியின்போது அமைக்கப்பட்ட தேவஸ்தான போர்டு இதுகுறித்து விளக்க அளிக்க வேண்டும் என்றார் அவர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்