அச்சச்சோ.. அல்வா கடையே.. வெள்ளத்துல மூழ்கிப் போயிருச்சே..  நெல்லையின் பரிதாப நிலை!

Su.tha Arivalagan
Dec 18, 2023,03:59 PM IST

- மஞ்சுளா தேவி


நெல்லை: நெல்லையில் நேற்று முதல் தற்போது வரை பெய்த அதீத கன மழையால் நெல்லை ரயில்வே ஜங்ஷன் அருகே உள்ள புகழ் பெற்ற லட்சுமி விலாஸ் அல்வா கடை மழை நீரில் மூழ்கியது.


தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், குமரி மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சியால் தற்போது தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, ஆகிய மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. 


தற்போது நெல்லை மாநகரமே தனித்தீவு போல உள்ளது. இது மட்டும் அல்லாமல் குற்றாலம், பாபநாசம், போன்ற அருவிகளில்  ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் நெல்லை தாமிரபரணி ஆற்றுப் பாலங்கள் அனைத்திலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது. பாலமே தெரியாத அளவுக்கு வண்ணாரப்பேட்டை பகுதியில் வெள்ளம் கரைபுரண்டோடிக் கொண்டிருக்கிறது.




இந்நிலையில் நெல்லை ரயில்வே ஜங்ஷன் முழுவதும் தண்ணீர் சூழ்ந்து ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. ஜங்ஷன் அருகே உள்ள பிரபலமான லட்சுமி விலாஸ் அல்வா கடை தண்ணீரில் மூழ்கியுள்ளது. கடையின் பெயர் போர்டு மட்டுமே தெரிகிறது. அந்த அளவிற்கு தண்ணீர் கடை முழுவதும் ஆக்கிரமித்துள்ளது. கடை அருகே உள்ள கார் தண்ணீரில் மூழ்கி காணப்படுகிறது.


நெல்லையில் இருட்டுக் கடை அல்வாவுக்குப் பிறகு இந்த லட்சுமி விலாஸ் அல்வாக் கடைதான் பிரபலம். ஜங்ஷன் பகுதியில் உள்ள இந்தக் கடைதான் ஒரிஜினல் லட்சுமி விலாஸ் அல்வாக் கடை. இந்த அல்வாக் கடை இப்போது வெள்ளத்தில் மூழ்கியிருப்பது அனைவரையும் பதற வைத்துள்ளது. நெல்லையில் எந்த அளவிற்கு வெள்ளம் பாத்திருக்கிறது என்பதை இந்த படத்தின் மூலமே பார்க்கலாம். நெல்லை மாநகரத்தின் மையப் பகுதியிலேயே  இந்த நிலைமை என்றால்  தாழ்வான பகுதிகள் மற்றும் ஏரிகள் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களின் நிலைமை என்னவாகும் என்று சற்று யோசித்துப் பாருங்கள். 


மக்கள் அனைவரும் வெளியில் வர முடியாமல் தவிர்த்து வருகின்றனர். இவர்களின் நிலைமையை சீர்செய்ய இன்னும் ஒரு வாரமாவது ஆகும்  என்று தெரிகிறது. விவசாயிகள் நலம் பெற மழை வேண்டும்.. மழை வேண்டும்.. என பிரார்த்தியுங்கள் என கூறுவோம். தற்போது மழை போதும்.. மழை போதும்.. என்று சொல்லும் அளவிற்கு மழை கொட்டி தீர்த்துள்ளது. இயற்கையை நாம் ஒன்றும் செய்ய முடியாது. அதன் வழிகள் எங்கெல்லாம் ஆக்கிரமிக்ககப்படுகிறதோ.. அதை அதுவே வந்து எடுத்துக் கொள்கிறது.. அதேததான் சென்னையும் சரி, நெல்லையும் சரி நமக்கு விளக்குகிறது.. !