தெருவில் இறங்கி சண்டை.. பரபரத்துப் போன வளசரவாக்கம்.. நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது புகார்!

Manjula Devi
Apr 01, 2024,06:20 PM IST

சென்னை: பக்கத்து வீட்டு பெண்ணை  அவதூறாக பேசி, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி  நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது புகார் எழுந்துள்ளது.


உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் 1983 ஆம் ஆண்டு வெளிவந்த நாயகன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சரண்யா பொன்வண்ணன். இவர் இயக்குனர் பொன்வண்ணனை திருமணம் செய்து கொண்டவர். திருமணத்திற்குப் பிறகும் இவர் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து அசத்தி வருகிறார்.




சிறிய ரோலாக இருந்தாலும்  இவருடைய நடிப்பின் திறமையால் பிரபலமாக பேசப்படுபவர். ராம் திரைப்படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அம்மா கேரக்டர்களில் அசத்திக் கொண்டிருக்கும் சரண்யா பொன்வண்ணன் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.


நடிகை சரண்யா பொன்வண்ணன் சென்னை விருகம்பாக்கத்தில் பத்மாவதி நகரில் வசித்து வருகிறார். இவருடைய பக்கத்து வீட்டுப்பெண் ஸ்ரீதேவி. இவர் தனது வீட்டின் முன் பக்கத்தில் உள்ள 20 அடி கேட்டை திறக்கும் போது சரண்யா பொன்வண்ணனின் காரின் அருகே மோதுவது போல சென்றதாக கூறப்படுகிறது. 


இதையடுத்து இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டது. சரண்யா கோபமடைந்து தெருவுக்கே வந்து விட்டார். ஸ்ரீதேவியின் வீட்டிற்கு முன்பு வந்து ஆவேசமாக சண்டை போட்ட சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.  இந்த நிலையில் தன்னை அவதூறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக ஸ்ரீதேவி  கொடுத்த புகாரின் பேரில், விருகம்பாக்கம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.