விட்டாச்சு லீவு.. சென்னையிலிருந்து அலைகடலென.. படையெடுக்கும் மக்கள் கூட்டம்.. பஸ், ரயில்களில்!

Su.tha Arivalagan
Oct 21, 2023,11:36 AM IST

சென்னை:  ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை என தொடர் விடுமுறை வருவதால், சென்னையிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்கு கிளம்பிச் செல்கிறார்கள். இதனால், பஸ் மற்றும் ரயில் நிலையங்களில் கூட்டம் அலை மோதுகிறது. 


கூட்ட நெரிசலை தவிர்க்க பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகளை அரசு இயக்கி வருகிறது. 




தமிழ்நாட்டில் ஆயுத பூஜை, விஜயதசமி ஆகியவை திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் வருகிறது. இன்று ஒரு நாள் லீவு எடுத்தால் நான்கு நாட்கள் சுளையாக லீவு கிடைக்கும். இந்த தொடர் விடுமுறையின் காரணமாக சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகரித்து வருகிறது.


நேற்றிலிருந்தே பலரும் கிளம்பத் தொடங்கி விட்டனர். அரசு அறிவித்துள்ள சிறப்புப் பேருந்துகள் நிரம்பி வழிகின்றன. ரயில்களிலும் கூட்டம் அலைமோதுகிறது. பகல் நேரங்களில் அனைத்து ரயில் நிலையங்களும் கூட்டத்தால் நிரம்பிக் காணப்படுகின்றன. சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. 




சென்னையின் முக்கிய பகுதியான தாம்பரம், கோயம்பேடு, பெருங்களத்தூர், போன்ற பேருந்து நிலையங்களில் அளவுக்கு அதிகமான மக்கள் வருகையால்  பேருந்து நிலையங்களில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சென்னையிலிருந்து வழக்கமாக தென் மாவட்டங்களுக்குத்தான் அதிக அளவிலான மக்கள் செல்வார்கள். அதேபோல விமானங்களில் செல்லவும் மக்கள் இப்போது ஆர்வம் காட்டுவதால் விமான நிலையத்திலும் வழக்கமானதை விட கூட்டம் அதிகமாகவே உள்ளது.


தொடர் விடுமுறையால் கூட்ட நெரிசலை தவிர்க்க கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.