நீட்டுக்கு எதிராக அடுத்த கட்ட போராட்டம் டெல்லியில்.. உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை: நீட் தேர்வுக்கு எதிரான அடுத்த கட்ட அறப் போராட்டம் டெல்லியில் நடைபெறும் என்று திமுக இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதைத் திரும்பப் பெறக் கோரி வலியுறுத்தியும், மத்திய அரசு மற்றும் மாநில ஆளுநரின் போக்கைக் கண்டித்தும் தமிழ்நாடு முழுவதும் இன்று திமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
திமுகவின் இளைஞர் அணி, மாணவர் அணி மற்றும் மருத்துவர் அணி சார்பில் இந்த உண்ணாவிரதம் முன்னெடுக்கப்பட்டது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் உண்ணாவிரதம் நடைபெற்றது.
உதயநிதி ஸ்டாலினுடன், அமைச்சர்கள் துரைமுருகன், பி.கே.சேகர்பாபு, எம்எல்ஏக்கள் எழிலன் நாகநாதன், கனிமொழி என்விஎன் சோமு, எம்.பி. தயாநிதி மாறன், சென்னை மேயர் பி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதேபோல தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் திமுக முன்னணியினர் உண்ணாவிரதம் இருந்தனர். அவர்களுடன் தொண்டர்களும் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர்.
உண்ணாவிரதம் தொடங்குவதற்கு முன்பு, நீட் தேர்வு எழுதித் தோல்வியுற்றும், தேர்வில் வெற்றி பெற்றும் கூட மருத்துவ இடங்கள் கிடைக்காமல் போனதாலும் தற்கொலை செய்து உயிர்நீத்த மாணவ மாணவியருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன் பிறகு உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது.
மாலை 5 மணியளவில் பழச்சாறு அருந்தி உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு பெற்றது. உண்ணாவிரதத்தின் இறுதியில் பேசிய உதயநிதி ஸ்டாலின் ஆளுநர் ஆர். என். ரவியை கடுமையாக சாடிப் பேசினார். அவர் பேசுகையில், நீட் தேர்வு எழுதியும் மருத்துவ அட்மிஷன் கிடைக்காமல் மாணவர் ஜெகதீசன் தற்கொலை செய்து கொண்டார். அது தற்கொலை அல்ல. கொலை. அந்தக்கொலைக்கு மத்திய அரசுதான் பொறுப்பு. அந்த மத்திய அரசுடன் அதிமுக கைகோர்த்து நிற்கிறது. இந்தப் போராட்டத்தில் ஒரு அமைச்சராகவோ அல்லது எம்எல்ஏவாகவோ நான் பங்கேற்கவில்லை. இறந்து போன மாணவனின் அண்ணனாக கலந்து கொண்டுள்ளேன் என்றார் உதயநிதி ஸ்டாலின்.
மேலும், நீட் தேர்வுக்கு எதிரான அடுத்த கட்ட போராட்டம் டெல்லியில் நடைபெறும் என்றும் அவர் அறிவித்தார். இதுதொடர்பாக பின்னர் அவர் போட்ட டிவீட்டில், மருத்துவக் கல்லூரிக்குப் போக வேண்டிய தமிழ்நாட்டு மாணவர்களை, மரணத்தை நோக்கி தள்ளுகின்ற நீட் தேர்வுக்கு எதிராக, ஒன்றிய அரசையும் - ஆளுநரையும் கண்டித்து திமுக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி சார்பில் நடைபெற்ற மாபெரும் உண்ணாவிரத அறப்போரில் பங்கேற்று, இன்று மாலை நிறைவுரை ஆற்றினோம்.
இந்த அறவழிப் போராட்டத்தை ஆசிரியர் அய்யா கி. வீரமணி, அவர்கள், பழச்சாறு கொடுத்து முடித்து வைத்தார்கள். அவர்களுக்கு என் அன்பும், நன்றியும். இன்றைக்கு இந்த அறப்போராட்டம் முடிந்தாலும், கழகத்தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, நீட் ஒழியும் வரை அதற்கெதிரான நம்முடைய அடுத்தடுத்த நடவடிக்கைகள் தொடரும்.
தமிழ்நாடு முழுவதும் இந்த உண்ணாவிரத அறப்போரில் பங்கேற்ற மாண்புமிகு அமைச்சர்கள் - மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் - இளைஞர் அணி - மாணவர் அணி - மருத்துவ அணி நிர்வாகிகள் - உறுப்பினர்கள் - தோழமை இயக்கத் தலை���ர்கள் - கழகத் தொண்டர்கள் - கல்வியாளர்கள் - பெற்றோர்கள் - மாணவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
நம் மாணவர்களின் கல்வி உரிமை காக்க - நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து ஓர் இயக்கமாக செயல்படுவோம் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.