தீவுத் திடலில் கேப்டன் விஜயகாந்த் உடல்.. அஞ்சலி செலுத்த.. ஆயிரக்கணக்கில் திரண்டு வரும் தொண்டர்கள்!

Su.tha Arivalagan
Dec 29, 2023,08:08 AM IST

சென்னை: தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த்தின் தீவுத் திடலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டு வந்து கொண்டுள்ளனர்.


தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று காலை மரணமடைந்தார். 71 வயதான அந்த மக்கள் மனம் கவர்ந்த தலைவரின் மரணச் செய்தி அனைவரையும் உலுக்கியுள்ளது.  விஜயகாந்த் உடல் முதலில் அவரது வீட்டுக்குக் கொண்டு வரப்பட்டது.. அதன் பின்னர் தேமுதிக தலைமை அலுவலகத்திற்குக் கொண்டு வரப்பட்டது. அங்கு தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வந்தனர்.




இந்த நிலையில் கூட்டம் அதிகரித்துக் கொண்டே வந்ததால் அந்த இடத்திலிருந்து பெரிய இடத்திற்கு விஜயகாந்த் உடஸலை மாற்றத் திட்டமிடப்பட்டது. அதன்படி இன்று காலை விஜயகாந்த் உடல் தீவுத் திடலுக்கு மாற்றி வைக்கப்பட்டது. இதையடுத்து தற்போது அங்கு தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


உயர்த்தி வைக்கப்பட்ட மேடையில் விஜயகாந்த்தின் உடல் கிடத்தப்பட்டுள்ள பெட்டி வைக்கப்பட்டுள்ளது. பெட்டிக்கு அருகே மனைவி பிரேமலதா விஜயகாந்த், விஜயகாந்த் மகன்கள், மைத்துனர் ஆகியோர் சோகமே உருவாக அமர்ந்துள்ளனர்.


பொதுமக்கள் அஞ்சலிக்குப் பிறகு விஜயகாந்த்தின் உடல் இறுதி ஊர்வலம் இன்று பிற்பகல் 1 மணிக்குத் தொடங்கும். பூந்தமல்லி சாலை வழியாக கோயம்பேடு தேமுதிக தலைமைக்கழக அலுவலகத்தை அடையும். அங்கு மாலை 4.45 மணியளவில் இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டு உடல் நல்லடக்கம் நடைபெறும். முழு அரசு மரியாதைகளுடன் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.