தூத்துக்குடியில்.. வெயிலால் பாதிக்கப்பட்டு.. வரும் நோயாளிகளுக்காக.. ஏசி வார்டு அமைப்பு!

Manjula Devi
May 03, 2024,03:36 PM IST

தூத்துக்குடி:  தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் கடும் வெயிலால் பாதிக்கப்பட்டு நீர்ச்சத்து குறைந்து சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ஏசி வார்டு  தொடங்கப்பட்டுள்ளது.


நாளை முதல் தான் அக்னி நட்சத்திரம் தொடங்க உள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் காட்டு காட்டு என்ற காட்டி வருகிறது. வெளியில் தலை காட்ட முடியவில்லை. வெயிலில் சென்றால் தலைபாரம், தலை சுற்றல், வயிற்றுப்போக்கு, அஜீரணக் கோளாறு என பல பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதற்காகவே வெயிலுக்கு பயந்து பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை வீட்டுக்குள்ளேயே முடங்கி வருகின்றனர்.




கண்டிப்பாக பணி நிமித்தம் காரணமாக வெளியில் சென்று தான் ஆக வேண்டும் என்ற சூழ்நிலையில் உள்ள பெரும்பாலான மக்கள் வெயில் என்று கூட பொருட்படுத்தாமல் வேலைக்குச் செல்கின்றனர். இதனால் வேலைக்குச் செல்லும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். அப்படி செல்லும்போது அவர்களுக்கு நீர்ச்சத்து குறைவு ஏற்படுகிறது. 


வெயில் காலத்தை சமாளிக்க தமிழக அரசு குடிநீர் பந்தல் அமைத்தல், மோர் வழங்குதல், ஓ ஆர் எஸ் கரைசல் பாக்கெட் வழங்குதல், உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை ஏற்கனவே செயல்படுத்தி  வருகிறது. தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் இரண்டு தினங்களுக்கு வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்பதால் வெப்ப அலைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த சமயத்தில் மக்கள் வீட்டை விட்டு தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என  அந்தந்த மாவட்ட ஆட்சியாளர்கள் அறிவுறுத்தியும் வருகின்றனர்.


இந்த சூழ்நிலையில் கண்டிப்பாக வெளியே செல்லும் மக்களுக்கு கடும் வெயிலால், நீர்ச்சத்துக் குறைவு ஏற்பட்டு வருகிறது. இதனை சமாளிக்க தமிழக அரசு சிறப்பு ஏற்பாடு ஒன்றை செய்துள்ளது. அதன்படி கடும் வெயிலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிறப்பு ஏசி வார்டு தொடங்கப்பட்டுள்ளது. வெயில் தாங்க முடியாமல் சிகிச்சைக்கு வருவோருக்கு 6 படுக்கைகளுடன் கூடிய குளிரூட்டப்பட்ட தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சிறப்பு வார்டில் வென்டிலேட்டர், ரத்த பரிசோதனை உள்ளிட்ட அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.


மேலும் வெயிலால் பாதிக்கப்பட்டு நீர்ச்சத்து குறைந்து வருபவர்களுக்கு ஓ ஆர் எஸ் கரைசல் வழங்கும் பணியும் நடைபெற்று வருகிறது.