திருவண்ணாமலையில் கோலாகலம்.. மகா தீபம் ஏற்றப்பட்டது.. "அரோகரா" கோஷமிட்டு பக்தர்கள் பரவசம்!

Su.tha Arivalagan
Nov 26, 2023,05:50 PM IST

திருவண்ணாமலை: திருவண்ணாமலை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீபம் ஏற்றும் வைபவம் கோலகாலமாக நடந்தேறியது. மலை உச்சியில் அமைக்கப்பட்ட ராட்சத கொப்பரையில் தீபம் ஏற்றப்பட்டதைத்  தொடர்ந்து திருவண்ணாமலையிலும், தமிழ்நாட்டின் பிறப குதிகளிலும் மக்கள் வீடுகளில் தீபம் ஏற்றி வழிபட்டனர்.


திருவண்ணாமலை தீபத் திருவிழா நவம்பர் 17ம் தேதி அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் ஏற்றும் வைபவம் இன்று அதிகாலை நடந்தது. அதிகாலை 4 மணியளவில் அருணாசலேஸ்வரர் கோவில் கருவறை முன்பு  ஏற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து மலை உச்சியில் மகா தீபம் மாலை 6 மணியளவில் ஏற்றப்பட்டது.


2668 அடி உயரம் கொண்ட மலையின் உச்சியில் அமைக்கப்பட்டுள்ள ராட்சத கொப்பரையில் தீபம் ஏற்றப்பட்டது. இதற்காக விசேஷ ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மகா தீப கொப்பரையில் 4500 கிலோ நெய் மற்றும் ராட்ச காடா திரி பொருத்தப்பட்டு தீபம் ஏற்றப்பட்டது.




இங்கு ஏற்ற்படும் மகா தீபமானது, திருவண்ணாமலை முழுவதும் மக்களுக்குத் தெரியும். இந்தத் தீபத்தைப் பார்த்த பிறகுதான் மக்கள் வீடுகளில் தீபம் ஏற்றி வழிபடுவார்கள். மகா தீபத்தையொட்டி திருவண்ணாமலை முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர். மகா தீபம் ஏற்றப்பட்டதும் பக்தர்கள் அரோகரா கோஷமிட்டு வழிபட்டனர். 


தீபத் திருவிழாவையொட்டி திருவண்ணாமலை முழுவதும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.


மதுரை திருப்பரங்குன்றத்திலும் தீபம் ஏற்றப்பட்டது


இதேபோல மதுரை திருப்பரங்குன்றம் மலை  மீதும் மகா தீபம் ஏற்றப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது. திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள உச்சிப்பிள்ளையார் கோவிலில் உள்ள மோட்ச தீப மண்டபத்தில் இதற்காக 5 அடி உயர கொப்பரை அமைக்கப்பட்டது. அந்த கொப்பரையில் நெய் ஊற்றி, திரி வைத்து தீபம் ஏற்றப்பட்டது.


திருச்சி மலைக்கோட்டையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோவிலிலும் தீபம் ஏற்றப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.