திருவண்ணாமலை மலை  தீபத் திருவிழா முடிந்தது.. கொப்பரை கீழே வந்தது.. 27ம் தேதி "பிரசாத மை"!

Meenakshi
Dec 07, 2023,11:26 AM IST
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மலை தீபத்திருவிழா நேற்றுடன் நிறைவடைந்தது. வருகிற 27ம் தேதி ஆருத்ர தரிசனத்தில் போது பிரசாத மை பக்தர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீப திருவிழா நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. கார்த்திகை தீபத் திருவிழா கடந்த மாதம் 17ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெற்ற இவ்விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். 

கடந்த மாதம் 26ம் தேதி கோயிலுக்குள் பரணி தீபம் எற்பட்டது. அதன் பின்னர் கோவில் பின்புறம் உள்ள 2668 அடி உயரம் உள்ள மலைக்கோயில் உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. இந்த மகா தீபம் மலை உச்சியில் 11 நாட்களுக்கு  மாலை 6 மணிக்கு ஏற்றப்படும். இந்த தீப தரிசனத்தை ஏராளமான பக்தர்கள் கண்டு  தரிசனம் செய்வர். அத்தகைய சிறப்புடைய மகா தீபக் காட்சி நேற்றுடன் நிறைவடைந்தது. அதைத்தொடர்ந்து இன்று காலை மகாதீபம் ஏற்றப்பட்ட தீபக் கொப்பரை மலை உச்சியிலிருந்து அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது. 



கோயிலில்,  தீபம் ஏற்றப்படும் கொப்பரைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின்னர் ஆயிரங்கால் மண்டபத்தில் பக்தர்கள் தரிசனத்திற்காக  வைக்கப்பட்டுள்ளது. இந்த கொப்பரையில் இருந்து கிடைக்கும் மகா தீபம் மை மிகவும் சிறப்புடையதாகும். வருகிற 27ம் தேதி ஆருத்ர தரிசனம் நடைபெறும் அன்று நடராஜருக்கு தீப மை அணிவிக்கப்படும். அதன் பின்னர் அந்த மை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.