திருவண்ணாமலை தீபம் 2024 : அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.. பக்தர்கள் பரவச வழிபாடு!

Su.tha Arivalagan
Dec 13, 2024,10:05 AM IST

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவில் கருவறையில் இன்று அதிகாலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு மகிழ்ந்து வழிபட்டனர்.


திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நடந்து வருகிறது. இன்றுதான் இதில் முக்கியமான நாள். காலையில் பரணி தீபமும், மாலையில் மகா தீபமும் ஏற்றப்படும். மகா தீபம் ஏற்றப்பட்டதும்தான் தமிழ்நாடு முழுவதும் மக்கள் தங்களது வீடுகளில் விளக்கேற்றி வைத்து வழிபடுவார்கள்.




அந்த வகையில் இன்று அதிகாலை 3.30 மணிக்கு அண்ணாமலையார் கோவில் கருவறையில் பரணி தீபம் ஏற்றி வைக்கப்பட்டது. பரணி நட்சத்திர நாளில் இந்தத் தீபம் ஏற்றப்படுவதால் இதற்கு பரணி தீபம் என்று பெயர் வந்தது. இன்று முதல் 3 நாட்களுக்கு தினசரி மாலையில் வீடுகளில் விளக்கேற்றி வைப்பார்கள்.


இதைத் தொடர்ந்து அடுத்து மாலை 6 மணி அளவில் திருவண்ணாமலை தீப மலை மீது மகா தீபம் ஏற்றப்படுகிறது. கிட்டத்தட்ட 2700 அடி உயரம் கொண்ட இந்த மலையில் இதற்காக ராட்சத கொப்பரையை நேற்றே வைத்து விட்டனர். கொட்டும் மழையிலும் இந்தப் பணி நடந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் திரண்டு வருகின்றனர். மாலை மகா தீப தரிசனத்திற்காக அவர்கள் காத்துள்ளனர்.


மகா தீபத் திருவிழாவையொட்டி திருவண்ணாமலையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள், போக்குவரத்து வசதிகள், பார்க்கிங் வசதிகள், குடிநீர் உள்ளிட்ட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.


திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் முழுவதும் தீப ஒளியால் ஜொலித்துக் கொண்டுள்ளது. திருவண்ணாமலை நகரமும் கூட விழாக் கோலம் பூண்டுக் காணப்படுகிறது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்