அருணகிரிநாதர் வழங்கிய.. திருமுருகன் திருப்புகழ் பாராயணம் இசை நிகழ்ச்சி.. துபாயில் கோலாகலம்..!

Manjula Devi
Jul 12, 2024,12:02 PM IST

துபாய்:   துபாயில் திருமுருகன் திருப்புகழ் 108 மணிமாலை நான்காவது தொகுப்பு அரங்கேற்ற இசை விழா கோலாலமாக நடைபெற்றது. இதில் இசைக் கலைஞர்கள் மற்றும் திரளான முருக பக்தர்களும் கலந்து கொண்டு முருகனின் திருவருளை பெற்றனர்.




திருப்புகழ் என்பது முருகப்பெருமான் மீது அருணகிரிநாதர் இயற்றிய ஒரு பக்தி நூல். முருகன் மீது அன்பு கொண்டவர்கள் பாராயணம் செய்யும் ஒரு சிறந்த மந்திர நூல் ஆகும். திருப்புகழை பாடப் பாட வாய் மணக்கும் என்பார்கள். இந்த திருப்புகழை அன்புடனும், ஒருமித்த மனதுடனும் ஓதுவார்க்கு அஷ்டமா சித்திகளும் உண்டாகுமாம். முருகனின் திருப்புகழ் பாடல்கள் அமுதம் போன்றவை. முருகப் பெருமானுடைய திருவருளை எளிதாகப் பெற  திருப்புகழை உள்ளம் உருகி ஓதுவதே சிறந்தது. இந்த திருப்புகழ் பெரும்பாலும் கர்நாடக சங்கீத முறையிலேயே பாடப் பெற்று வருகிறது.


துபாய் நகரின் புர்ஜ் துபாய் பகுதியில் உள்ள சிந்தி செரிமோனியல் அரங்கில், திருமுருகன் திருப்புகழ் 108 மணிமாலை நான்காவது தொகுப்பு அரங்கேற்ற இசை நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. இந்த இசை நிகழ்ச்சி திருமுருகன் திருப்புகழ் பாராயண குழுவினரால் வெகு சிறப்பாக  கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்ட இசைக் கலைஞர்கள் மெ. சுப்பிரமணியன் என்ற சண்முகா பாட, குமாரி மெ.ரமணி மெய்யம்மை கீபோர்டு வாசிக்க விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.




மேலும் இந்த திருப்புகழ் இசை விழாவில் திரளான முருக பக்தர்கள் கலந்து கொண்டு முருகப் பெருமானை நினைத்து திருப்புகழ் இசை மழையில் நனைந்து வடிவேலனின் திருவருளை பெற்றனர். குறிப்பாக திருமுருகன் திருப்புகழ் பாராயணம் குழுவினரால் நடத்தும் இந்த திருப்புகழ் 108 மணிமாலை நான்காம் தொகுப்பு பாராயணம்,  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பாடல்களின் தொகுப்பாகும்.