மார்கழி 19 ஆண்டாள் திருப்பாவை பாசுரம் 19 - குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்

Swarnalakshmi
Jan 02, 2025,04:38 PM IST

-ஸ்வர்ணலட்சுமி


திருப்பாவை பாசுரம் 19 :


குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்

மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி

கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்

வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய் திறவாய்!

மைத்தடங் கண்ணினாய்! நீயுள் மணாளனை

எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்

எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்

தத்துவமன்று தகவேலோர் எம்பாவாய்.




பொருள் : 


குத்து விளக்கு எரிய, யானை தந்தத்தால் செய்யப்பட்ட கட்டிலின் மேல் போடப்பட்ட மென்மையான பஞ்சு மெத்தையில், விரிந்த கொத்தான பூ சூடிய கூந்தலை உடைய நப்பின்னையின் மார்பில் தலை வைத்து கண் மூடி, தன்னுடைய மார்பில் பலவிதமான மலர் மாலைகளை அணிந்து தூங்கிக் கொண்டிருக்கும் கண்ணனே! நீ எங்களுடன் வாய் திறந்து பேசும். மை பூசிய கண்களை உடைய நப்பின்னையே! நீ உன்னுடைய கணவனாகிய கண்ணனை எவ்வளவு நேரம் ஆனாலும் தூக்கத்தில் இருந்து எழுப்புவதில்லை. காரணம், அவனை ஒரு நூலிழை நேரம் கூட பிரிந்திருக்க நீ விரும்ப மாட்டாய். இது உன்னுடைய குணநலன்களுக்கு ஏற்ற தகுதியான செயல் ஆகாது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்