மார்கழி 10 ஆண்டாளின் திருப்பாவை பாசுரம் 10.. நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
- ஸ்வர்ணலட்சுமி
மார்கழி 10 ஆண்டாளின் திருப்பாவை பாசுரம் 10.. நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
திருப்பாவை பாசுரம் 10 :
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டுடொருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகர்ணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில் தந்தானோ?
ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.
பொருள் :
முந்தைய பிறவியில் எம்பெருமானாகிய நாராயணனை வேண்டி நோன்பு இருந்ததன் பயனாக இப்போது சொர்க்கம் போன்ற சுகத்தை அனுபவித்து தூங்கிக் கொண்டிருக்கும் பெண்ணே!் உன்னுடைய வீட்டின் கதவை திறக்கா விட்டாலும் பரவாயில்லை. பேச கூட மாட்டாயா? நறுமனம் மிக்க துளசியையும், மலர்களையும் சூடிக் கொண்டிருக்கும் நாராயணனை நாம் போற்றி பாடி, நோன்பு இருந்தால் அதற்குரிய பலனை அவன் உடனடியாக தருவான்.
முந்தைய காலத்தில் தூக்கத்திற்கு உதாரணமாக கும்பகர்ணனை சொல்வார்கள். ஆனால் உன்னுடைய தூக்கத்தை பார்த்து, அவனே உன்னிடம் தோற்று, உன்னுடன் தன்னால் தூக்கத்தில் போட்டி போட முடியாது என எண்ணி, தன்னுடைய தூக்கம் மொத்தத்தையும் உனக்கு அளித்து விட்டானோ!சோம்பலுக்கு உதாரணமாக இருப்பவளே! கிடைப்பதற்கு அரிதான அணிகலன்களை அணிந்தவளே தடுமாற்றம் இல்லாமல் வந்து கதவை திறந்து வெளியே வா.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்