திருப்பள்ளியெழுச்சி பாடல் 09 - விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா விழுப்பொருளே

Aadmika
Jan 14, 2024,09:20 AM IST

திருப்பள்ளியெழுச்சி பாடல் 09 : 


விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா விழுப்பொருளே

உன தொழுப்பு அடியோங்கள்

மண்ணகத்தே வந்து வாழச் செய்தானே

வண்திருப்பெருந்துறையாய் வழி அடியோம்

கண்ணகத்தே நின்று களிதரு தேனே 

கடலமுதே கரும்பே விரும்படியார்

எண்ணகத்தாய் உலகுக்கு உயிர் ஆனாய் 

எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.




பொருள் :


விண்ணுலகில் உள்ள தேவர்களாலும் எணுகி, உணர முடியாத வேதத்தின் உயரிய பொருளாக விளங்குபவனே. வழி வழியாக உனக்கு தொண்டு செய்வதற்காகவே எங்களின் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட அடியார்களாகிய எங்களுக்கு அருள் செய்து, வாழ வைப்பதற்காக மண்ணுலகிற்கு வந்தவனே. அழகான பசுமை நிறைந்த திருப்பெருந்துறை தலத்தில் வீற்றிருக்கும் பெருமானே, எங்களின் கண்ணுக்குள் இருக்கும் மணியை போல் இருந்து எங்களை காத்து, இன்பமான வாழ்வை தரும் தேன் போன்ற இனிமையானவனே. பாற்கடலில் இருந்து தோன்றிய அமிர்தத்தை போலும், தித்திப்பான கரும்பை போலவும் அடியார்களால் விரும்பப்படுபவனே. உன்னை விரும்பும் அடியார்களின் எண்ணித்தில் வசிப்பவனே. அனைத்து உலகங்களுக்கு உயிர் போல் இருந்து இயக்குபவனே. எங்களுக்கு அருள் செய்வதற்காக எழுந்திருக்க வேண்டும்.


விளக்கம் :


சிவ பெருமானை மலர்களுடனும், இயற்கையுடனும் ஒப்பிட்ட மாணிக்கவாசகர் நேற்றைய பாடலில் பலாபழத்துடன் ஒப்பிட்டு பாடினார். இதைத் தொடர்ந்து இன்று, தேன், கரும்பு மற்றும் அமிர்தத்தை போல் இனிப்பானவன் என போற்றி பாடுகிறார். இதில் சிவனும், விஷ்ணுவும் ஒன்றே என்பதைப் போல் மகாவிஷ்ணுவின் உறைவிடமான பாற்கடலில் தோன்றிய அமிர்தத்திற்கு இணையானவன் என்றும் குறிப்பிடுகிறார். அது மட்டுமல்ல அமிர்தம் என்பது அழியாத தன்மையை தரக் கூடியது. அதே போல் சிவ பெருமானின் அருளும் அழியாத நிலையான தன்மை கொண்டது என குறிப்பிடுகிறார். நடராஜரின் ஆடலில் தான் உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பார்கள். அதை இங்கு மாணிக்கவாசகர், அனைத்து உலகிற்கும் உயிர் போன்று இருப்பவர் என குறிப்பிடுகிறார்.