திருப்பள்ளியெழுச்சி பாடல் 08 - முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்

Aadmika
Jan 13, 2024,10:48 AM IST

திருப்பள்ளியெழுச்சி பாடல் 08 :


முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய் மூவரும் அறிகிலர்

யாவர் மற்று அறிவார்

பந்தணை விரலியும் நீயும் நின் அடியார் பழங்குடில்

தொறும் எழுந்தருளிய பரனே

செந்தழல் புரை திருமேனியுங் காட்டித் திருப்பெருந்தறை

உறை கோயிலுங் காட்டி

அந்தணன் ஆவதும் காட்டி வந்து ஆண்டாய் ஆரமுதே

பள்ளி எழுந்தருளாயே.


பொருள் :




முதலும் முடிவும் இல்லாதவன் நீ. மேல் உலகம், பூலோகம், பாதாள உலகம் என்னும் மூன்று உலகங்களும் தோன்றுவதற்கு முன்னால் தோன்றியவன் நீ. ஊழி காலத்திலும் அழிவு இல்லாமல் நிலையாக இருக்கக் கூடியவன் நீ. பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகிய மூவராலும் கூட உன்னை அறிய முடியவில்லை. அவர்களாலேயே உன்னை அறிய முடியவில்லை என்றால் மற்றவர்களால் உன்னை எப்படி அறிய முடியும்? பார்வதியும் நீயும் அனைத்து அடியவர்களின் வீடுகளிலும் எழுந்தருளி இருக்கிறீர்கள். குடிசை, மாளிகை என்ற பேதம் இல்லாமல் அனைத்து இடங்களிலும் இருப்பவன் நீ. எரிகின்ற நெருப்பினை போன்று உடலைக் கொண்ட எங்களின் தலைவனே, திருப்பெருந்துறை தலத்தையும் காட்டி, அங்கு எளிமையாக அந்தணரின் வடிவத்தில் வந்து எனக்கு உன்னுடைய திருமேனியையும் தரிசிக்கும் பாக்கியத்தை அளித்து விட்டாய். என்னை ஆட்கொண்டது போல் உலக உயிர்களையும் அருள் தந்து, ஆட்கொள்ள எழுந்து வர வேண்டும் இறைவனே.


விளக்கம் :


கடவுளுக்கு ஏழை, பணக்காரர்கள், தேவர், மனிதர் என்று எந்த பாகுபாடும் பேதமும் கிடையாது. அவர் இல்லாத இடமும் கிடையாது. இறைவன் இங்கு தான் இருப்பார். இங்கு இருக்க மாட்டார் என எவராலும் சொல்லி விட முடியாது. உண்மையான பக்தி இருந்தால் ஏழையின் குடிசையிலும் இறைவன் எழுந்தருளுவான் என்பதை இந்த பாடலில் மாணிக்கவாசகர் விளக்கி உள்ளார். அதே போல் இறைவன், அனைத்து உலகங்களுக்கும் முன்னால் தோன்றியவனாக இருக்கிறான். அவரை யாராலும் அவ்வளவு எளிதில் அறிந்து விட முடியாது என சொல்லும் மாணிக்கவாசகர், சிவ பெருமான் தனக்கு எப்படி எளிமையாக காட்சி தந்தார் என்பதையும் இங்கு குறிப்பிட்டுள்ளார்.