திருப்பள்ளியெழுச்சி பாடல் 07.. "அது பழச்சுவையென அமுதென அறிதற்கு அரிதென"

Aadmika
Jan 12, 2024,10:38 AM IST

திருப்பள்ளியெழுச்சி  பாடல் 07:


அது பழச்சுவையென அமுதென அறிதற்கு அரிதென

எளிதென அமரரும் அறியார் 

இது அவன் திருவுரு இவன் அவன் எனவே எங்களை

ஆண்டுகொண்டு இங்கு எழுந்து அருளும்

மதுவளர் பொழில் திரு வுத்தரகோச மங்கையுள்ளாய்

திருப் பெருந்துறை மன்னா

எது எமைப் பணிகொளும் ஆறது கேட்போம்

எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே 


பொருள் :




வெளித்தோற்றத்தில் பார்ப்பதற்கு பலாபழம் முற்களுடன் இருப்பதை போல் நீ யாராலும் எளிதில் நெருங்க முடியாதவனாக இருக்கிறாய். ஆனால் நீ உள்ளே இருக்கும் இனிப்பான சுளைகளை போன்று அமிர்தத்திற்கு இணையான குணத்தை உடையவன் என்பதை உன்னை உணர்ந்தவர்களால் மட்டுமே உணர முடியும். மற்றவர்கள் அதை அறிய மாட்டார்கள். உன்னுடைய உருவம் இது தான். நீ இப்படித் தான் இருப்பாய், இவரை போல தான் இருப்பாய் என யாரும் அறிந்தது கிடையாது. அதை தேவர்களும் கூட அறிந்திருக்க மாட்டார்கள். தேவர்கள், மனிதர்கள் என்ற பாகுபாடு இன்றி அனைவரையும் ஆண்கொண்டு, அருள் செய்யும் உத்திரகோசமங்கை தலத்தில் இருக்கும் திருப்பெருந்துறை மன்னனே எங்களையும் ஆட்கொள்ள வேண்டும். எங்களுக்கு எது சிறந்ததோ அதை எங்களுக்கு தந்து அருள் செய்து, எங்களை வாழ வைக்க வேண்டும் என உன்னிடம் வேண்டுகிறோம். எங்களுக்கு அருள் செய்வதற்காக எழுந்து வர வேண்டும்.


விளக்கம் :


சிவ பெருமானை மலர்களுடனும், இயற்கையுடனும் ஒப்பிட்டு பாடிய மாணிக்கவாசகர், இந்த பாடலில் பலாபழத்துடன் ஒப்பிட்டு பாடி உள்ளார். இறைவன் வடிவம் இல்லாதவர், எந்த பாகுபாடும் இல்லாதவர் என தெரிவிக்கும் மாணிக்கவாசகர், இந்த பாடலில் உத்திரகோசமங்கை தலத்தையும் குறிப்பிடுகிறார். திருப்பள்ளியெழுச்சியின் முந்தைய பாடல்கள் அனைத்திலும் திருப்பெருந்துறை தலத்தை மட்டுமே குறிப்பிட்ட மாணிக்கவாசகர் இந்த பாடலில் மட்டும் உத்திரகோசமங்கை தலத்தையும் குறிப்பிடுகிறார். உத்திரகோசமங்கையில் உள்ள மரகத நடராஜர் வருடத்தின் அனைத்து நாட்களும் சந்தனத்தால் மூடப்பட்டிருப்பார். வருடத்திற்கு ஒரு நாள் மட்டுமே சந்தன காப்பு களையப்பட்டு, மரகத திருமேனியின் தரிசனத்தை காண முடியும். அது போல் மிக அரிதானவர்களால் மட்டுமே இறைவனை உணர முடியும் என்பதை சொல்வதற்காகவே இங்கு உத்திரகோசமங்கை தலத்தை மாணிக்கவாசகர் சொல்கிறார். 


இறைவனின் அது வேண்டும், இது வேண்டும் என கேட்பது சரியல்ல. எனக்கு எது சரியோ, என்னுடைய வாழ்க்கைக்கு எது ஏற்றதோ அதை கொடு என கேட்பதே முறையாகும். நம்மை படைத்த இறைவனுக்கு தெரியும், நமக்கு எது சிறப்பானது, ஏற்றது என்று என நினைத்து நம்மை முழுவதுமாக இறைவனிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதையே மாணிக்கவாசகர் வலியுறுத்தி உள்ளார்.