திருப்பள்ளியெழுச்சி பாடல் 04 : இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால் இருக்கொடு

Aadmika
Jan 09, 2024,10:32 AM IST

திருப்பள்ளியெழுச்சி பாடல் 04 :


இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால் இருக்கொடு

தோத்திரம் இயம்பினர் ஒருபால்

துன்னிய பிணை மலர்க் கையினர் ஒருபால் தொழுகையர்

அழுகையர் துவள்கையர் ஒருபால்

சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்

திருப்பெருந்துறையுறை சிவபெருமானே

என்னையும் ஆண்டு கொண்டு இன்னருள் புரியும் 

எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.


பொருள் :




வீணை, யாழ் போன்ற இனிய இசையை தரும் இசைக்கருவிகளை கையில் ஏந்தி, உன்னை இசையால் துதித்துக் கொண்டிருப்பவர்கள் ஒரு பக்கம் இருக்கிறார்கள். மந்திரங்கள், வேதங்கள் சொல்லி உன்னை போற்றி பாடுபவர்கள் ஒரு பக்கம் இருக்கிறார்கள். பலவிதமான வாசனை மலர்களைக் கொண்டு உன்னை பூஜித்து வணங்குபவர்கள் ஒரு பக்கம் இருக்கிறார்கள். உன் மீது கொண்ட பக்தியின் மிகுதியால் கண்ணில் கண்ணீர் தாரை தாரையாக வடிந்து ஓட விட்டு காத்திருப்பவர்கள் ஒரு பக்கம் இருக்கிறார்கள். பக்தி பரவசத்தில் மெய் சிலிர்த்து உன்னை வணங்குபவர்கள் ஒரு பக்கம் இருக்கிறார்கள். தங்களின் தலைக்கு மேல் கைகளை கூப்பி, பலவிதமான பெயர்களை சொல்லி உன்னை அழைப்பவர்கள் ஒரு பக்கம் இருக்கிறார்கள். திருப்பெருந்துறை என்னும் தலத்தில் வீற்றிருந்து அருள் செய்யம் சிவ பெருமானே, உன்னுடைய அடியவர்கள் அனைவருக்கும் உன்னுடைய அருளை தந்து காப்பதுடன் என்னையும் ஆட்கொண்டு எனக்கும் உன்னுடைய இனிமையான அருளை தர வேண்டும். அதற்காக துயில் எழ வேண்டும்.


விளக்கம் :


தான் மட்டுமே நன்றாக இருக்க வேண்டும். இறைவனின் அருள் தனக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் என நினைப்பது சுயநலத்தின் வெளிப்பாடாக இருக்கும். அது பக்தி கிடையாது. அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்றே இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும். உலகத்தில் உள்ள அனைவரும் நன்றாக வாழ வேண்டும். அவர்கள் அனைவருக்கும் இறைவனின் அருள் கிடைக்க வேண்டும். அவர்களுடன் சேர்ந்து நானும் நன்றாக இருக்க வேண்டும். எனக்கும் இறைவனின் அருள் கிடைக்க வேண்டும் என வேண்டிக் கொள்வது பிரார்த்தனையின் சரியான முறையாகும். இறைவனிடம் எப்படி பிரார்த்தனை செய்ய வேண்டும் என்ற முறையையே மாணிக்கவாசகர் இந்த பாடலில் நமக்கு விளக்குகிறார்.