திருப்பள்ளியெழுச்சி பாடல் 03.. "கூவின பூங்குயில் கூவின கோழி"

Aadmika
Jan 08, 2024,09:58 AM IST
திருப்பள்ளியெழுச்சி பாடல் 03 :

கூவின பூங்குயில் கூவின கோழி
குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்
ஓவின தாரகை ஒளியொளி உதயத்
தொருப்படு கின்றது விருப்பொடு நமக்குத்
தேவநற் செறிகழல் தாளிணை காட்டாய்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே!
யாவரும் அறிவரி யாம்எமக் கெளியாய்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே!

பொருள்  :



பொழுது விடிவதை கூறிக் கொண்டு குயில் இனங்கள் கூவ துவங்கி விட்டன. கோழி இனங்களும் கூவ துவங்கி விட்டன. பறவைகள் ஒலி எழுப்பிக் கொண்டு தங்களின் பணியை துவக்க தயாராகி விட்டன. சங்குகளின் ஒலியும் முழங்க துவங்கி விட்டன. சூரியனின் ஒளி எங்கும் பரவ துவங்கி விட்டதால் இதுவரை வானில் கூட்டம் கூட்டமாக மின்னிக் கொண்டிருந்த நட்சத்திரக் கூட்டங்கள் தற்போது மறைய துவங்கி விட்டன. அதிகாலை சூரியன் விரியும் போது இருக்கும் இதமான செந்நிற வானத்தை போல் சிவந்திருக்கும் சிலம்பணிந்த உன்னுடைய திருவடிகளை எங்களுக்கு காட்டி அருள வேண்டும். திருப்பெருந்துறை என்னும் தலத்தில் குடிகொண்டிருக்கும் சிவபெருமானே, யாராலும் எளிதில் அணுக முடியாத அறிய முடியாதவனாக இருக்கக் கூடிய நீ, அடியார்களாகிய எங்களுக்கு எளியவனாக இருந்து அருள் செய்பவனே. எங்களுக்கு உன்னுடைய அருளை வழங்க தூக்கம் கலைந்து எழ வேண்டும்.

விளக்கம் :

உலக உயிர்கள் மட்டுமல்ல இயற்கையும் உன்னுடைய அருளை பெறுவதற்காக காத்துக் கொண்டிருக்கின்றன. எங்கள் அனைவருக்கும் அருள் செய்வதற்காக எழுந்து கொள்ள வேண்டும் என சிவ பெருமானை எழுப்புகிறார் மாணிக்கவாசகர். நேற்றைய பாடலில் இறைவின் முகத்தின் அழகை மலருடன் ஒப்பிட்டு பாடிய மாணிக்கவாசகர் இன்று, இறைவனின் திருவடி பற்றி பாடுகிறார்.

சிவ பெருமானின் அடி முடியை காணச் சென்ற பிரம்மனும், விஷ்ணுவும் கூட தோல்வி அடைந்தனர். அவர்களுக்கு அடிமுடி காண முடியாத அண்ணாமலையனாக ஜோதி வடிவமாக திருவண்ணாமலையில் காட்சி தந்தார் சிவபெருமான். அப்படிப்பட்ட யாருக்குமே எளிதில் கிடைக்காத உன்னுடைய திருவடியை எங்களுக்கு காட்டி அருள் செய்ய வேண்டும். நாங்கள் அந்த திருவடியை தரிசிக்க மட்டும் வரவில்லை. நீயே கதியென்று உன்னுடைய திருவடியை பற்றி சரணடைய வந்திருக்கிறோம். அதனால் பிரம்மனையும், விஷ்ணுவையும் சோதித்தது போல் அடியாளர்களாகிய எங்களை சோதிக்காமல் எளிமையானவனாக எங்களுக்காக மனமிறங்கி உன்னுடைய திருவடியை காட்ட வேண்டும். அடியார்களாகிய எங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் என வேண்டுகிறார் மாணிக்கவாசகர்.