திருப்பதி செல்வோர் கவனத்திற்கு.. இவங்கெல்லாம் பாதயாத்திரை வர வேண்டாம்.. தேவஸ்தானம் கோரிக்கை!

Meenakshi
Oct 26, 2024,11:07 AM IST

திருப்பதி: திருப்பதிக்கு 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், ஆஸ்துமா, வலிப்பு, மூட்டு நோய்கள் உள்ளவர்கள் பாதயாத்திரை வர வேண்டாம் என்று திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


உலகப்பிரசித்த பெற்ற கோவில்களுள் ஒன்று திருப்பதி. இந்த கோவிலில் வருடம் முழுவதும் கூட்டம் நிரம்பி வழியும். திருப்பதி வெங்கடாசலபதியை தரிசிக்க வரும் பக்தர்கள் இங்கு தங்கியிருந்து தரிசனம் செய்வது வழக்கம். கீழ் திருப்பதியில் இருந்து மலைக்கு செல்லும் நடைபாதை சிறப்பானதாகும். இப்பாதையின் இருபுறமும் ஆழ்வார்களின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது. நடைபாதையில் வருகின்ற பக்தர்களுக்கு தர்ம தரிசனமும், தங்குமிடமும் இலவசமாக தேவஸ்தானம் வழங்கி வருகிறது. இங்கும் வரும் பக்தர்களில் ஏராளமானோர் பாதையாத்திரையாக வருவது வழக்கம்.




இந்நிலையில், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் உடல் உபாதைகள் உள்ளவர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் பாதையாத்திரை வர வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது. அந்த உத்தரவின் படி கீழ்க்கண்டோர் பாதயாத்திரையாக வரக் கூடாது:


60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள்

சர்க்கரை நோய் உள்ளவர்கள்

ரத்த அழுத்தம் உள்ளவர்கள்

ஆஸ்துமா வீஸிங் பிரச்சினை உள்ளவர்கள்

வலிப்பு நோய் உள்ளவர்கள்

மூட்டு பிரச்சனைகள் உடையவர்கள் 


இவர்கள் எல்லாம் திருப்பதி எழுமலையான் கோவிலுக்கு பாதயாத்திரை மூலம் வர வேண்டாம் என்று தேவஸ்தானம் கோரிக்கை விடுத்துள்ளது.  படி ஏறும்போது, ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருக்கும் என்பதாலும், உடல் பருமனாக உள்ளவர்கள் மற்றும் இதய நோய்க்காரர்கள் மலைப்பாதையில் நடந்து செல்வது நல்லதல்ல என்பதாலும், அவர்கள் வாகனங்களில் வந்து தரிசனம் செய்யலாம் என்றும் திருப்பதி தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்