நெல்லை மேயராக தேர்வானார் கிட்டு என்கிற ராதாகிருஷணன்.. ஆனால் திமுகவை அதிர வைத்த அந்த 23 பேர்!

Su.tha Arivalagan
Aug 05, 2024,06:52 PM IST

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சி மேயராக கிட்டு என்கிற ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார். போட்டியின்றி அவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று திமுக எதிர்பார்த்திருந்த நிலையில் திமுகவிலிருந்து கடந்த ஆண்டு நீக்கப்பட்ட கவுன்சிலர் பவுல்ராஜ் போட்டியில் குதித்து அதிர வைத்து விட்டார்.


பவுல்ராஜ் போட்டியிட்டதை விட அவருக்குக் கிடைத்த வாக்குகள்தான் திமுக மேலிடத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மொத்தம் உள்ள 55 கவுன்சிலர்களில் திமுகவுக்கு 50 உறுப்பினர்கள் உள்ளனர். அதிமுகவுக்கு 4 பேரும், சுயேச்சை ஒருவரும் உள்ளனர். இதில் திமுக வேட்பாளர் கிட்டுவுக்கு 30 வாக்குகள் கிடைத்தன. அதேசமயம், பவுல்ராஜுக்கு 23 வாக்குகள் கிடைத்ததுதான் திமுகவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.




திமுகவின் வேட்பாளராக நேற்றுதான் கிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அவருக்கு வாக்களிக்காமல், 20 திமுக கவுன்சிலர்கள் திமுகவிலிருந்து நீக்கப்பட்டவருக்கு வாக்கு அளித்திருப்பதன் மூலம் கிட்டுவின் செயல்பாடுகளுக்கு நிச்சயம் மாநகராட்சிக் கூட்டங்களில் பெரும் இடையூறு ஏற்படும் என்பதையே உணர்த்துவதாக சொல்கிறார்கள்.


இன்று நடந்த முறைமுக தேர்தலின்போது அதிமுக கவுன்சிலர் ஒருவர் மட்டும் வரவில்லை. மற்ற 54 பேரும் வாக்களித்திருந்தனர். தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ள போதிலும் கூட கட்சியை விட்டு நீக்கப்பட்ட வேட்பாளருக்கு 20 திமுக கவுன்சிலர்கள் வாக்களித்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


இவர்களால் திமுக மேயர் கிட்டுவுக்கு சிக்கல் வரக் கூடாது என்பதால் விரைவில் இவர்களை சென்னைக்கு அழைத்து கட்சி  மேலிடம் சமரசம் பேசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.