திருநெல்வேலி மாநகர மேயர் தேர்தலில்.. திமுக சார்பில் கிட்டு என்கிற ராமகிருஷ்ணன் போட்டி!

Su.tha Arivalagan
Aug 04, 2024,11:30 AM IST

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர மேயர் தேர்தலில் திமுக சார்பில் கிட்டு என்கிற ராமகிருஷ்ணன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


திருநெல்வேலி மாநகர மேயராக இருந்தவர் பி.எம்.சரவணன். இவர் மீது திமுக கவுன்சிலர்களிடையே கடும் அதிருப்தி எழுந்து போர்க்கொடி உயர்த்தினர். இதையடுத்து கடந்த ஜூன் மாதம் அவர் ராஜினாமா செய்தார். இதையடுத்து அடுத்த மேயர் வேட்பாளரைத் தேர்வு செய்ய இன்று திமுக கவுன்சிலர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.




இதில் திமுக மேலிடம் சார்பில் அமைச்சர்கள் கே.என். நேரு, தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனையின் இறுதியில் மேயர் வேட்பாளராக கிட்டு என்கிற ராமகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 25வது வார்டு கவுன்சிலராக இருக்கிறார். திருநெல்வேலி டவுன் பகுதியைச் சேர்ந்தவர். மிக மிக எளிமையானவர். எளிதில் இவரை அணுக முடியும். 3வது முறையாக அவர் கவுன்சிலராக இருந்து வருகிறார்.


கடந் 1994ம் ஆண்டு உருவாக்கப்பட்ட திருநெல்வேலி மாநகராட்சியில் இதுவரை 5 முறை மேயர் பதவிக்கு தேர்தல் நடந்துள்ளது. முதல் தேர்தல் 1996ல் நடந்தது. திமுக சார்பில் உமா மகேஸ்வரி முதல் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் 2001ல் அதிமுகவின் ஜெயராணி, 2006ல் திமுகவின் ஏ.எல். சுப்ரமணியன், 2011ல் அதிமுகவின் விஜிலா சத்தியானந்த், 2014ல் அதிமுகவின் புவனேஸ்வரி, 2022ல் திமுகவின் பி.எம்.சரவணன் ஆகியோர் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டனர். திமுக மற்றும் அதிமுக சார்பில் தலா 3 மேயர்கள் இதுவரை பதவி வகித்துள்ளனர்.

 

திருநெல்வேலி மாநகராட்சியில் மொத்தம் 55 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் திமுக வசம் 44 பேரும், திமுக கூட்டணி சார்பில் 7 பேரும் (காங்கிரஸ் 3, மதிமுக, சிபிஎம், மார்க்சிஸ்ட் மற்றும் சுயேச்சை தலா 1), அதிமுகவில் 4 பேரும் உறுப்பினர்களாக உள்ளனர்.