கூட்டணி தொடருமா?...முதல்வருடன் பேசியது என்ன?...திருமாவளவன் அளித்த பளிச் பதில்

Aadmika
Sep 16, 2024,03:49 PM IST

சென்னை : ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் பேசிய வீடியோ தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பிய பிறகு இன்று முதல் முறையாக திமுக தலைவரும், தமிழக முதல்வருமான முதல்வர் ஸ்டாலினை திருமாவளவன் சந்தித்து பேசினார். அப்போது பேசப்பட்ட விஷயங்கள் குறித்து செய்தியாளர்களிடம் அவர் விரிவாக தெரிவித்துள்ளார்.


மது விலக்கு மாநாட்டிற்கு அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தது விடுதலை சிறுத்தைகள் கட்சி. இதைத் தொடர்ந்து, தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில், ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்டு பேசிய வீடியோ ஒன்றை பதிவிட்டார் தொல் திருமாவளவன். இது பெரும் பரபரப்பை கிளப்பியது. அதற்கு பிறகு மது விலக்கு விவகாரத்தை கையில் எடுத்ததற்காக கூட்டணியில் விரிசல் வந்தாலும் அதை சந்திக்க தயாராக இருப்பதாகவும். எது வந்தாலும் ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பதாகவும் திருவாவளவன் பேசி இருந்தார்.


திருமாவளவனின் அடுத்தடுத்த பேச்சிகளால் திமுக- விசிக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேற உள்ளதாகவும் பலவிதமான பேச்சுக்கள் அரசியல் வட்டாரங்களில் எழுந்தது. இந்நிலையில் இன்று தமிழக முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலினை திருமாவளவன் சந்தித்தது மிகவும் முக்கியமானதாக பார்க்கப்பட்டது. இந்த சந்திப்பின் போது என்ன பேசுவார்கள், என்ன முடிவெடுப்பார்கள் என அனைவரும் ஆர்வமாக காத்திருந்தனர்.




ஸ்டாலின் - திருமாவளவன் சந்திப்பின் போது திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். மற்ற மூத்த உறுப்பினர்கள் யாரும் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை என சொல்லப்படுகிறது. முதல்வரை சந்தித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், சந்திப்பின் போது பேசப்பட்ட விஷயங்கள் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தார்.


செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த திருமாவளவன், முதல்வருடனான சந்திப்பின் போது ஆட்சி, அதிகாரம் குறித்து பேசிய வீடியோ குறித்து எதுவும் பேசப்படவில்லை. மதுவிலக்கு என்பது எங்களின் கொள்கை. அதை படிப்படியாக நிறைவேற்ற வேண்டும் என்பதை எங்களின் முதல் கோரிக்கையாக கேட்டுக் கொண்டோம். விசிக.,வின் மதுவிலக்கு மாநாட்டிற்கு அதிமுக.,வை அழைத்தது போல் திமுக.,வையும் அழைத்தோம். அவர்களும் வருவதாக தெரிவித்துள்ளனர். இந்த மாநாடு நடத்துவதில் எந்த அரசியல் உள்நோக்கமும் கிடையாது. மதுவால் பாதிக்கப்படுவோரின் கண்ணீரை துடைப்பதற்காக மட்டுமே. 


இந்த மாநாட்டிற்கும் திமுக-விசிக கூட்டணிக்கும் எந்த தொடர்பும் கிடையாது. மதுவிலக்கு என்பது எங்களின் கொள்கை. திமுக-விசிக கூட்டணியில் விரிசல் என சொல்லப்படுவது எல்லாம் வெறும் வதந்தி. சட்டசபை தேர்தலில் கூட்டணி பற்றி பேசுவதற்கு இப்போது என்ன அவசரம்? அதற்கு இன்னும் எத்தனையோ மாதங்கள் இருக்கிறது. தேர்தலை மனதில் வைத்து நாங்கள் அரசியல் ஆதாயத்திற்காக மதுவிலக்கு மாநாட்டை நடத்தவில்லை என்றும் திருமாவளவன் தெரிவித்தார்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்.