டாஸ்மாக்கை மட்டும் மூடுங்க.. எத்தனை விஜய் வந்தாலும்.. திமுகதான் வெல்லும்.. திருமாவளவன்

Meenakshi
Sep 13, 2024,06:46 PM IST

செங்கல்பட்டு:   வருகிற தேர்தலுக்கு முன்பு அனைத்து அரசு மதுக்கடைகளையும் மூடினால், எத்தனை விஜய் வந்தாலும் திமுக தான் வெற்றி பெறும். மதுவுக்கு எதிரான போராட்டத்தின் மூலம் என்ன விளைவுகள் வந்தாலும் அதனை எதிர்கொள்ள தயார் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.


செங்கல்பட்டு மாவட்டம் மறைமலர் நகரில் நடைபெற்ற நான்கு மாவட்ட விசிக செயற்குழுக் கூட்டத்தில் திருமாவளவன்  கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: 




கட்டாயம் மது கடைகளை மூட முடியும் என்ற நம்பிக்கையோடு நாம் களத்தில் நிற்க வேண்டும். அதுதான் முக்கியம்.  எலசக்சன் கால்குலேசனில் இறங்கியிருக்கிறோம், நாம் சீன் போடுகிறோம் என்று செல்பவர்கள் சொல்லிக்கொள்ளட்டும். அதைப் பற்றி ஒரு கவலையும் இல்லை. திமுகவை நேரடியாக சொல்வதற்கு பயந்து கொண்டு பூசி மொழுகி தேசிய கொள்கை என்று டைவர்ட் செய்வதாக கூறி வருகின்றனர்.


நாங்கள் சொல்வதை புரிந்து கொள்ளும் ஞானம் வேண்டும். இதனைப் புரிந்து கொள்வதற்கு உங்களுக்கு சக்தி தேவை. தமிழ்நாட்டில் மது கடைகளை மூட வேண்டும் என்று தான் சொல்கிறோம். அதில், எந்த தயக்கமும் எங்களுக்கு இல்லை. திமுக தலைமையில் இருக்கிற தோழமைக்  கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணியில்  இருந்து கொண்டே பேசுகிறது என்று கூறுவார்கள். ஆனால், இதனை யாரும் பாராட்ட மாட்டார்கள். 


கூட்டணியில் இருந்து கொண்டே கேள்வி கேட்கவில்லை என்று கேட்பார்கள். கேள்வி கேட்டால் ஏன் கூட்டணியில் இருந்து கொண்டு கேள்வி கேட்கிறீர்கள் என்பார்கள்.  கேள்வி கேட்பவர்களின் ஒரே நோக்கம் கூட்டணியில் இருந்து விலகி வந்து பலவீனப்படுத்த வேண்டும் என்பது தான். கூட்டணியில் இருந்து கொண்டே கேள்வி கேட்பதற்கு ஒரு கெத்து வேண்டும். அது விடுதலை சிறுத்தை கட்சிக்கு தான் இருக்கிறது.


வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு அரசு மதுபான கடைகளை மூடினால், எத்தனை விஜய் வந்தாலும் திமுக தான் வெற்றி பெறும். இதனால் விடுதலை சிறுத்தை கட்சிக்கு என்ன பலன் என்று கேட்டால் மதுபான கடைகளை மூடுவதே எங்களுக்கு வெற்றி தான்.அதை விட எங்களுக்கு வேற  என்ன வெற்றி வேண்டும். முதல்வர் மு.க.ஸ்டாலினை விமர்சிக்க எந்த தயக்கமும் இல்லை. அப்படி இருந்தால் இது போன்ற ஒரு முடிவையே எடுத்து இருக்க முடியாது.


தேர்தல் களத்தில் பாதிப்பு ஏற்படும். கூட்டணியில் சிக்கல் ஏற்படும் என்ற நிலை வந்தாலும் கூட மதுவுக்கு எதிராக போராட்டத்தில் இருந்து ஒருபோதும் விலகக் கூடாது. இந்த போராட்டத்தின் மூலம் எந்த வித பிரச்சனை வந்தாலும் அதனை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் என்று பேசியுள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்